கர்நாடகாவில் கிட்னி விற்பனை படுஜோர்... 2 போலீசாருடன் 7பேர் கைது!
கர்நாடகாவில் சட்டவிரோதமாக கிட்னி விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் கோபால், மகாதேவ் என்னும் இருவரும் முக்கியக் குற்றவாளிகள் என போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், ஸ்ரீகாந்த் என்பவரும், அவர்களுக்கு உதவியதாக பெங்களூர் வடக்குப் பிரிவில் பணியாற்றும் இரு போலீஸாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மைசூர் மற்றும் பெங்களூர் அருகேயுள்ள கிராமங்களில் ஏழைகளைக் குறிவைத்து அவர்கள் கிட்னி மோசடியில் ஈடுபட்டு வந்ததாக புகார் எழுந்தது. அவர்களிடம் இருந்து 50 ஆயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய்க்கு கிட்னியை பெற்று, தேவைப்படுபவர்களிடம் 10 லட்சம் ரூபாய் அளவுக்கு விற்று வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ராம்நகர் மாவட்டம் மாகடி ராம்நகர் கனகபுரா சுற்றுப்புற பகுதிகளில் ஏழை குடும்பத்தை சேர்ந்த 25க்கும் மேற்பட்டோரிடம் கிட்னியை விற்குமாறு சிலர் வற்புறுத்தி வந்தனர். இது தொடர்பாக போலீஸூக்கு கிடைத்த தகவலையடுத்து டிசம்பர் 31ம் தேதி இரண்டு பேரை ராம்நகர் போலீஸார் கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் கிட்னியை தானமாக பெற்று விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து விசாரணை நடத்திய கும்பளகோடு போலீஸார் பெங்களூரு வடக்கு தாலுகா ரெவின்யூ இன்ஸ்பெக்டர் ரஞ்சன் மாகடியின் உணவு மற்றும் பொது விநியோக துறையின் கான்ட்ராக்டர் ஸ்ரீகாந்த், கனகபுரா கோபால் மஞ்சுநாத் அனந்த் உட்பட ஏழு பேரை கைது செய்தனர்.இவர்களிடமிருந்து கிட்னி மாற்று அறுவை சிகிச்சை குறித்த போலி டாக்குமெண்டுகள் போலி வாக்காளர் அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டது.
மாகடி உணவு மற்றும் பொது வினியோக துறையின் கான்ட்ராக்டர் ஸ்ரீகாந்திடம் நடத்திய விசாரணையில் கிட்னி தானமாக கொடுப்பவர்களுக்கு முறைகேடாக போலி டாக்குமெண்டுகளை கொடுத்தது தெரியவந்தது.ராம்நகர் மாண்டியா உள்ளிட்ட மாவட்டங்களில் பத்து ஆண்டுகளில் ஆயிரக்கணக்கானோர் சட்ட விரோதமாக கிட்னி விற்றுள்ளதாக உளவுத்துறை போலீஸ் தகவல் சேகரித்துள்ளனர்.
15 ஆண்டுகளாக, இடைத்தரகர்கள் மூலம் கிட்னி விற்பது நடந்து வருவதாக தெரிகிறது. இதில் 25க்கும் மேற்பட்டோரை, போலீஸார் வளைத்துள்ளனர். இடைத்தரகர்களின் மீதான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். போலீஸாரின் நடவடிக்கைகளுக்கு பயந்து சிலர் தலைமறைவாகிவிட்டனர். ஐந்து லட்சம் ரூபாயிலிருந்து பத்து லட்சம் ரூபாய் வரை பெறும் கிட்னி இடைத்தரகர்கள் கிட்னி கொடுப்பவர்களுக்கு பத்து முதல் 20 சதவீதம் வரை மட்டுமே பணம் கொடுக்கின்றனர்.இதுவரை சட்ட விரோதமாக 25 கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ள தகவல் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2006-07ல் இதுபோன்ற மோசடி நெலமங்களா பகுதியில் நடந்துள்ளது. இது தொடர்பாக கைதாகி ஜாமீனில் வந்துள்ள மஹாதேவய்யா தலைமறைவாக உள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் வாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய மோசடியில் ஈடுபட்டிருந்த போது, ராம்நகர் போலீஸாரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த கிட்னி மோசடியில் பிரபல மருத்துவமனைகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த மோசடியில் மேலும் பல மருத்துவமனைகளுக்கும் தனி நபர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக தலைமறைவாகவுள்ள மற்றொரு முக்கியக் குற்றவாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.