4 வயது மகளை சரமாரியாக அடித்து பிரிட்ஜில் அடைத்து வைத்த அப்பா
ராஜமுந்திரி, ஆந்திரா: ஆந்திராவில் 4 வயது மகளை இரக்கமே இல்லாமல் தாறுமாறாக அடித்து அவளை பிரிட்ஜுக்குள் போட்டு வைத்து விட்டார் ஒரு தந்தை. அந்த நபரை போலீஸார் கைது செய்து குழந்தையையும் மீட்டனர்.
கிழக்கு கோதாவரி மாவட்டம் நாராயணபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் பாஷா. இவர் சம்பவத்தன்று தனது 4 வயது மகள் மீது கோபம் கொண்டு சரமாரியாக அடித்தார். அப்படியும் ஆத்திரம் தீராமல், மகளை பிரிட்ஜில் போட்டு அடைத்து வைத்து விட்டார்.
இந்த விவரம் அறிந்ததும் அண்டை வீட்டார் பாஷாவின் வீட்டுக்குள் புகுந்தனர். அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து பிரிட்ஜைத் திறந்து உள்ளே அடைக்கப்பட்டிருந்த குழந்தையை மீட்டனர்.
கடும் காயத்துடன் கடும் குளிரில் தவித்தபடி இருந்த குழந்தையை ராஜமுந்திரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் உடல் நலம் அபாய கட்டத்தில் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications