கேரளாவில் ஓய்வூதிய திட்டத்துக்கு எதிர்ப்பு- அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம்
திருவனந்தபுரம்: கேரளாவில் உம்மன்சாண்டி அரசின் புதிய ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அரசு ஊழியர்கள் தொடங்கியுள்ளனர்.
கேரள அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் இன்று கேரளாவில் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின. பள்ளிகளுக்கு ஆசிரியர்களும் வரவில்லை. பல்கலைக் கழகங்கள் தேர்வுகளை ரத்து செய்திருக்கின்றன.
வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்போர் மீது எஸ்மா சட்டம் பாயும் என்று ஏற்கெனவே முதல்வர் உம்மன்சாண்டி அறிவித்திருந்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்தப் போராட்டத்தால் இன்று காலை தமிழகத்தில் இருந்து கேரள செல்லும் பேருந்துகள் அனைத்தும் கேரள எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் மற்றும் கேரளாவின் இதர பகுதிகளுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டன. பின்னர் காலை 7.30 மணிக்கு மேல் பேருந்து போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை என்று கிடைத்த தகவலின் பேரில் மீண்டும் இயக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications