ஜெயேந்திரர் மீதான ஆடிட்டர் தாக்கப்பட்ட வழக்கு-மகாராஷ்டிர வாலிபர் பரபரப்பு சாட்சியம்
சென்னை: ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கொலை வழக்கில் அரசுத் தரப்பில் ஆஜர்படுத்தப்பட்ட சாட்சியான மகாராஷ்டிராவைச் சேர்ந்த வாலிபர் பரபரப்பு சாட்சியம் அளித்தார். பின்னர் இந்த வழக்கு பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஜெயேந்திரர், அப்பு, கதிரவன், சுந்தரேச அய்யர் உள்ளிட்ட 12 பேர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை மந்தைவெளியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். ஆடிட்டரான இவரை 2002ம் ஆண்டு செப்டம்ர் 20ம் தேதி மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினர். இதை தடுக்க வந்த ராதாகிருஷ்ணனின் மனைவி ஜெயஸ்ரீ, உதவியாளர் கிருஷ்ணன் ஆகியோரையும் அந்த மர்ம நபர்கள் வெட்டினர். இது குறித்து பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெயேந்திரர், சுந்தரேசஅய்யர், ரகு, அப்பு, கதிரவன், லட்சுமணன், ஆனந்தகுமார் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கு நீதிபதி கலியமூர்த்தி (பொறுப்பு) முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் 6-வது சாட்சியான கிருஷ்ணன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவர் கூறுகையில்,
நான், மகாராஷ்டிர மாநிலம் ஹிப்பட் என்ற கிராமத்தை சேர்ந்தவன். அங்குள்ள மகராஜ் மடத்தில் வேலை செய்தேன். அங்கிருந்தவர்கள் மூலம், ராதாகிருஷ்ணன் அறிமுகமாக அவரது வீட்டில் தங்கியிருந்து வேலை செய்து வந்தேன்.
20.9.2002 அன்று 2 பேர் எனது வீட்டுக்குள் வந்து, ராதாகிருஷ்ணன் யார்? என்று கேட்டனர். நான் தான் ராதாகிருஷ்ணன் என்று கூறியபடி வந்த என் முதலாளியை அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டினர். அதை தடுக்க வந்த ஜெயஸ்ரீயையும் வெட்டினர். இதையடுத்து அந்த 2 பேரையும் நான் தடுத்தேன். என்னை அவர்கள் சரமாரியாக தலை, முகத்தில் அரிவாளால் வெட்டினர். நான் மயங்கி விழுந்துவிட்டேன். கண் விழித்த போது, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். என்னிடம் பட்டினப்பாக்கம் போலீசார் விசாரித்தனர் என்றார்.
பின்னர் ராதாகிருஷ்ணனை வெட்டியதாக ஆனந்தகுமார், லட்சுமணன் ஆகிய இருவரையும் சுட்டிக் காட்டி அடையாளம் காட்டினார். வழக்கு பின்னர் பிப்ரவரி 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications