நிரம்பி வழியும் சிறப்பு ரயில்கள்... பொங்கலுக்கு கூடுதல் ரயில் இல்லை... பயணிகள் ஏமாற்றம்

பொங்கல் பண்டிக்காக நான்கு நாட்கள் விடுமுறை உள்ளது. இதனால் சென்னையில் பணிபுரியும் தென்மாவட்ட மக்கள் சொந்த ஊர் திரும்புவதற்காக டிக்கெட்களை முன்பதிவு செய்துள்ளனர். சிறப்பு ரயில்கள் அனைத்தும் நிரம்பிவழிகின்றன. காத்திருப்போர் பட்டியல் அதிகரித்துள்ளது.
வழக்கமாக பொங்கலுக்கு முந்தைய 2 நாட்களுக்கு முன்பு கடைசிநேர கூட்ட நெரிசலை குறைக்க கூடுதலாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். குறிப்பாக தென்மாவட்ட பகுதி மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக இது இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பொங்கலுக்கு முந்தைய கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவில்லை என்று தெற்கு ரெயில்வே துணை தலைமை போக்குவரத்து மேலாளர் முரளி தெரிவித்துள்ளார். கடைசி நேர பரபரப்பையும், கூட்ட நெரிசலையும் கட்டுப்படுத்தவே இந்தாண்டு கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவில்லை.
ஆனால் இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாட கடந்த நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில்களின் எண்ணிக்கை 2011-ம் ஆண்டை விட அதிகமாகும். மேலும் சென்னையில் மதுரை, திருவனந்தபுரத்துக்கு தூரந்தோ எக்ஸ்பிரஸ்கள் தற்போது விடப்பட்டுள்ளது. இது தவிர சோழன், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனை கருத்தில் கொண்டு கடைசி நேர கூடுதல் சிறப்பு ரெயில்களை இந்த வருடம் இயக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த அறிவிப்பு தென் மாவட்ட மக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட வசதியாக 13-ந்தேதி அன்று பகல் நேர சிறப்பு ரெயிலை இயக்குவார்களா? என்று எதிர்பார்ப்பில் தென் மாவட்ட மக்கள் காத்திருக்கின்றனர். உட்கார்ந்து பயணம் செய்யக்கூடிய 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டிகளை கூடுதலாக இணைத்து இயக்கினால் பயன் உள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசுப்பேருந்து, தனியார் பேருந்துகளில் இடமில்லை என்பதால் அரசு போக்குவரத்து கழகங்கள் 5,000 சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications