விழுப்புரம், கடலூரில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும்: ராமதாஸ்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள ஆறுகளிலிருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருப்பதால் அதையே நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த தடையை நீக்கக்கோரி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மாட்டு வண்டித் தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் சரக்குந்துகள் மூலம் மணல் எடுத்துச் செல்லப்படுவதைப் போலவே, மாட்டுவண்டிகள் மூலம் மணல் எடுத்துச் செல்லப்படுவதும் ஒரு தொழிலாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 5 ஆயிரம் குடும்பங்களாவது இத்தொழிலை நம்பியுள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் பொதுப்பணித்துறை அனுமதியுடன் மாட்டு வண்டிகள் மணல் எடுத்து வந்த நிலையில், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மட்டும் இதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கான காரணம் எதையும் மாவட்ட நிர்வாகங்கள் தெரிவிக்கவில்லை. எனினும், மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. பசுமை வீடுகள் திட்டம் போன்ற சிறிய அளவிலான பணிகளுக்கும், பொங்கல் நேரத்தில் வீடுகளை பழுது பார்க்கும் பணிகளுக்கும் மணல் தேவைப்படுகிறது. இவற்றுக்கு குறைந்த மணல் போதுமானது.
மேலும், இந்தப் பணிகளை மேற்கொள்பவர்கள் அடித்தட்டு மக்கள் என்பதால் அவர்களால் அதிக விலை கொடுத்து சரக்குந்து மணலை வாங்க முடியாது. இவர்களுக்கு குறைந்த விலையில் மணல் கொடுத்து உதவி வந்தவர்கள் மணல் மாட்டு வண்டித் தொழிலாளர்கள் தான். மாட்டு வண்டிகளில் மணல் அள்ளத் தடை விதித்திருப்பதால் சிறிய அளவில் வீடு கட்டுதல், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை செய்து வந்த அடித்தட்டு மக்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களில் மட்டும் 100 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இவர்களிடம் அபராதம் என்ற பெயரில் ரூ.5 ஆயிரம் வரை பணம் பறிக்கப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பொதுப் பணித்துறை மூலம் உரிமம் அளிக்கப்பட்டு மாட்டுவண்டிகளில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது சரியல்ல. இது பல்லாயிரக்கணக் கான தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினை என்பதை கருத்தில் கொண்டு இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும்.
மற்ற மாவட்டங்களில் நடை முறையில் இருப்பதைப் போலவே விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒரு வண்டிக்கு ரூ.60 என்ற கட்டணத்தில் எந்த வித நிபந்தனையுமின்றி தொடர்ந்து மணல் அள்ள மாட்டு வண்டிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications