பலாத்கார சம்பவம்: கோர்ட்டில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய டெல்லி போலீஸ்
டெல்லி: ஓடும் பேருந்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் கடமை தவறியதற்காக உயர்நீதிமன்றத்தில் டெல்லி போலீஸ் மன்னிப்புக் கோரினர்.
டிசம்பர் 16-ந் தேதி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு அவரது நண்பருடன் தூக்கி வீசப்பட்டார். இந்த சம்பவத்தின் போது போலீசார் தங்களுக்கு உதவவில்லை என்றும் மோசமாக நடந்து கொண்டதாகவும் மாணவியின் ஆண் நண்பர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பலாத்கார சம்பவம் குறித்த விசாரணை இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான போலீசார், சம்பவ நாளன்று இரவு தாங்கள் நடந்து கொண்ட விதத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினர். மேலும் சம்பவத்தின் போது பணியில் இருந்த போலீசாரின் பெயர் பட்டியலும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இன்றைய விசாரணையின் போது குற்றவாளிகள் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையை பார்க்க பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அறைகள் மூடப்பட்ட நிலையில் விசாரணை நடைபெற்றது.
இந்த வழக்கு விசாரணை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இருந்து விரைவு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்களின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. இனி வழக்கு விசாரணை தினமும் நடத்தப்பட்டு அடுத்த மாதம் தீர்ப்பளிக்கப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications