பிடதியிலிருந்து வெளியேறுங்க நித்தியானந்தா... கன்னட அமைப்பு போராட்டம்
பெங்களூர் அருகே உள்ள பிடதியில் நித்யானந்தாவுக்கு ஆசிரமம் உள்ளது. மதுரை மடாதிபதியின் இளைய ஆதினமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதால் அவர் மதுரை வந்து பதவி ஏற்றார். ஆனால் அதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதால் அந்தப் பதவியிலிருந்து நித்தியானந்தாவைத் தூக்கினார் அருணகிரிநாதர்.
அதன் பிறகு திருவண்ணாமைலையிலும், பிடதியிலுமாக கேம்ப் மாறிக் கொண்டிருக்கிறார். நேற்று நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிடதி ஆசிரமத்திற்கு நித்தியானந்தா வந்தார். அவருடன் வழக்கம் போல ஆதரவாளர்களும் கும்பலாகப் போனார்கள். அங்கு அவர் அருளுரை என்ற பெயரில் தனது ஆதரவாளர்களிடையே பேசினார்.
இந்த நிலையில் நித்தியானந்தா வந்திருக்கிறார் என்ற தகவல் பரவியதும் கர்நாடக நவநிர்மான் சேனா என்ற அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டு வந்து நித்தியானந்தாவே வெளியேறு என்று கூறி போராட்டத்தில் குதித்தனர். மேலும் அங்கிருந்த பேனரில் இருந்த நித்தியானந்தா படத்துக்கும் கரியைப் பூசி குதூகலித்தனர்.
கடைசியில் போலீஸார் வந்து அனைவரையும் அமைதிப்படுத்தி கலைந்துபோகச் செய்தார்கள்.