பாகிஸ்தானுடனான அமைதிப் பேச்சுக்களை அடியோடு நிறுத்த இந்தியா முடிவு?
நேற்று பாகிஸ்தான் தூதர் சல்மான் பஷீரை நேரில் வரவழைத்து மத்திய வெளியுறவு அமைச்சகம் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது. மேலும், இந்த காட்டுமிராண்டித்தனமான கொலைகள் குறித்து பாகிஸ்தான் அரசு தீவிர விசாரணை நடத்தி தவறு செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் இந்திய அரசு கண்டிப்புடன் தெரிவித்தது.
இந்த நிலையில் தற்போது பாகிஸ்தானுடனான அனைத்து சமாதானப் பேச்சுக்கள், சுமூக உறவு தொடர்பான முயற்சிகள் அனைத்தையும் அடியோடு நிறுத்தும் முடிவுக்கு இந்தியா வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியாவுக்கு அமெரிக்கா ரகசிய ஆதரவு
இதற்கிடையே, இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு தாங்கள் ஆதரவு தருவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தரப்பு வேண்டும் என்றே பிரச்சினையை தூண்டும்வகையில் செயல்படுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்த கருத்தை அமெரிக்க அரசு பகிரங்கமாக தெரிவிக்கவில்லை. என்றாலும், தனிப்பட்ட முறையில் இந்தியாவிடம் இக்கருத்தை அது தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.