தருமபுரி சம்பவம்: ரூ7.32 கோடியை இடைக்கால நிவாரணமாக வழங்க அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: தருமபுரியில் நடந்த சாதி வெறி தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.7.32 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நவம்பர் 7-ந் தேதி நடைபெற்ற ஒரு காதல் திருமணத்தைத் தொடர்ந்து 3 கிராமங்களில் உள்ள 326 வீடுகளை சாதி வெறியர்கள் திட்டம்போட்டு சூறையாடினர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குரைஞர் செங்கொடி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தருமபுரி வன்முறையில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் கோரியிருந்தார்.
செங்கொடியின் மனுவை நீதிபதிகள் எலிபி தர்மாராவ், அருணா ஜெகதீசன் ஆகியோர் விசாரித்தனர். இந்த விசாரணையின் முடிவில், மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் மதிப்பிட்டதன் அடிப்படையில் 326 குடும்பங்களுக்கு ரூ.7.32 கோடியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் இடைக்கால நிவாரணமாக அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது,
மேலும் கலெக்டர் தவிர மற்றொரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு குழுவை அமைக்கப்பட்டு 2 வாரத்துக்குள் இடைக்கால நிவாரணத் தொகையை 326 குடும்பங்களுக்கும் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணை பிப்ரவரி 4ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications