ரயில் கட்டண உயர்வு: நடுத்தர மக்களுக்கு நெருக்கடி தரும்… வைகோ, விஜயகாந்த், சரத்குமார் எதிர்ப்பு
சென்னை: பயணிகள் ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது நடுத்தர, ஏழை மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஏற்கனவே, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு போன்றவற்றை மக்களால் தாங்க முடியாத நிலையில், ரயில் கட்டண உயர்வு கூடுதல் சுமையாக இருக்கும். எனவே நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் ரயில் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ரயில்வே நிர்வாகத்தை செம்மைப்படுத்தி வீண் செலவுகளைக் குறைத்தாலே கூடுதல் கட்டண உயர்வைத் தவிர்க்கலாம் என்றும் அவர் யோசனை கூறியுள்ளார். மத்திய - மாநில அரசுகள், இது போல் தொடர்ச்சியாக அனைத்து விலைகளையும் உயர்த்துவதால் மக்களின் வாழ்க்கைத் தரம் பெரிதும் பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.
வைகோ கண்டனம்
இதேபோல் வைகோவும் ரயில் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில், கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வால், மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பெட்ரோல் டீசல் விலையை தாறுமாறாக உயர்த்துவதும், சமையல் எரிவாயு வழங்குவதற்கு கட்டுப்பாடு விதித்து, மானியத்தை அடியோடு ரத்து செய்து விலையை உயர்த்துவதும், மத்திய அரசு பொதுமக்களைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து வரும் மத்திய அரசு, தமிழர்கள் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடிடும் மகிழ்ச்சியான தருணத்தில், ரெயில் கட்டணத்தை உயர்த்தி, பொதுமக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளதை கடுமையாக கண்டனம் செய்துவதுடன் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும் என்று வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
சரத்குமாரும் எதிர்ப்பு
இதே போன்று ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் ரயில் கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரும் வலியுறுத்தியுள்ளார்.