சைதாப்பேட்டையில் இளம்பெண்ணை வெட்டிக்கொன்று கல்லூரி வளாகத்தில் வீசிய மர்ம நபர்கள்
சென்னை: சைதாப்பேட்டையில் நள்ளிரவில் பெண்ணை வெட்டிக் கொன்ற மர்ம நபர்கள் உடலை கல்லூரி வளாகத்திற்குள் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.
சென்னை சைதாப்பேட்டை பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் அரசு மாதிரிப்பள்ளி, ஆசிரியர் பயிற்சி பள்ளி, தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் ஆகியவை ஒரே வளாகத்தில் பல ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்குள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளி எதிரே உள்ள சாலையோரம் சுமார் 38 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணமாகக் கிடந்தார். அவரை யாரோ வெட்டிக் கொன்றுள்ளனர். இன்று காலை 7 மணிக்கு அந்த வழியாக நடைபயிற்சி சென்றவர்கள் பிணத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகப்பு நிறத்தில் சேலை அணிந்துள்ள அவர் யார் என்று தெரியவில்லை. அவரது இடப்பக்க தலையில் காதோரம் அரிவாள் வெட்டு உள்ளது. அவரது காதில் கம்மல் உள்ளது. இடது கையில் சத்தி என்று பச்சை குத்தப்பட்டுள்ளது. அப்பகுதி பெண்களை அழைத்து அவரை அடையாளம் காட்டுமாறு போலீசார் கேட்டனர். ஆனால் அவர்கள் யாருக்கும் அவர் யார் என்றே தெரியவில்லை.
கருப்பாக இருக்கும் அவர் நடுத்தர குடும்பப் பெண் போல் உள்ளார். நள்ளிரவு 12 மணிக்கு மேல் அதிகாலை 4 மணிக்குள் கொலை நடத்திருக்கக்கூடும் என்று போலீசார் தெரிவித்தனர். அவர் பிணமாகக் கிடந்த இடம் புல் மண்டிக் கிடக்கிறது. அதற்து அருகிலேயே ஆசிரியர் குடியிருப்பு உள்ளது. கொலையாளிகள் அந்த பெண்ணை எங்கிருந்தாவது அழைத்து வந்து உல்லாசமாக இருந்திருக்கலாம் என்றும், அப்போது ஏற்பட்ட பணத்தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில் கதவின்றி பாழடைந்த கட்டிடங்கள் உள்ளன. அங்கு மதுபாட்டில்கள் ஆணுறைகள், சிகெரட் பாக்கெட்டுகள், பேப்பர் டம்ளர்கள் குவிந்து கிடக்கின்றது. அப்பகுதி திறந்தவெளி கழிப்பிடமாகவும் இருந்து வருகிறது. இந்த வளாகத்தை சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கல்வி நிறுவனம் வழியாகத் தான் வீட்டுக்கு செல்கின்றனர்.
இரவு நேரத்தில் இந்த வழியாக செல்லும் பெண்கள் மீது கற்கள் வீசப்படுகிறதாம். காலையில் கல்விக்கூடமாகவும் இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கும் இடமாகவும் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே கல்லூரி வளாகத்தில் இளம்பெண் ஒருவரின் பிணம் அதுவும் நிர்வாண கோலத்தில் கிடந்தது. அந்த பெண் யார் என்று இன்று வரை துப்பு துலங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேலும் ஒரு பெண் கொல்லப்பட்டுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் பீதி அடைந்துள்ளனர்.