'ஆத்திரம்.. அவசரம் கூடாது': அழகிரி மீது ஸ்டாலின் மறைமுக தாக்கு?
சென்னை: கட்சிப் பணிகளில் தங்களுக்கான முறை வரும் வரை காத்திருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். கட்சிப் பணிகளில் ஆத்திரமோ அவசரமோ கூடாது என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளது சர்ச்சையாக உருமாறியிருக்கிறது.
ஆனந்த விகடன் வார ஏட்டில் "கேள்வி-பதில்' பகுதியில் மு.க.ஸ்டாலின், "கட்சித் தொண்டர்களுக்கு உங்களது அறிவுரை என்ன?'' என்ற கேள்விக்கு அளித்துள்ள பதில்:
'கடமை, கண்ணியம், கட்டுப்பாடு... இம்மூன்றும்தான் பேரறிஞர் பெருந்தகை இட்ட கட்டளை. 'கடமை, கண்ணியத்தைவிட முக்கியமானது கட்டுப்பாடுதான் என்பது பெரியார் விதைத்த சிந்தனை. இந்த இரண்டையும்தான் தலைவர் கலைஞர் அடிக்கடி வழிமொழிந்து சொல்வார். அதேயே நானும் நினைவுபடுத்த விரும்புகிறேன்!
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போற்றிக் கட்சியைக் கண்ணும் கருத்துமாகக் காத்திட வேண்டும்; ஒவ்வொருவரும் அவருக்கான முறை வரும் வரை காத்திருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். கட்சிப் பணிகளில் ஆத்திரமோ அவசரமோ கூடாது; எந்த நிலையிலும் மாற்றாருக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. இவை யாவும் கட்சித் தோழர்கள் அனைவருக்குமான எனது அறிவுரை அல்ல: அன்பு வேண்டுகோள்! என்று கூறியுள்ளார்.
திமுகவின் அடுத்த தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்று கருணாநிதி பிரகடனம் செய்துவிட்டதால் அவரது அண்ணனான மு.க. அழகிரி கடும் கோபத்தில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்து, அழகிரிக்கு சொல்லப்படும் பதிலாக இருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.