சிஆர்பிஎப் வீரரை உயிரோடு பிடித்து...கண்ணைத் தோண்டி..நாக்கை துண்டித்த மாவோயிஸ்டுகள்!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் அண்மையில் சி.ஆர்.பி.எப்.படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது வீரர் ஒருவரை உயிரோடு பிடித்து அவரது கண்களைத் தோண்டி நாக்கை மாவோயிஸ்டுகள் துண்டித்ததாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
மிகப் பெரும் நடவடிக்கை
ஜார்க்கண்ட் மாநிலத்தின் லடேகரில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக கடந்த 6-ந் தேதி மிகப் பெரிய தேடுதல் நடவடிக்கையை சி.ஆர். பி.எப். படையினர் மேற்கொண்டனர். மலைப் பகுதிகளில் முன்னேறிய சி.ஆர்.பி.எப். படையினர் மீது உச்சிமலைகளில் மறைந்து இருந்து நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டுகள் கொரில்லா தாக்குதலை நடத்தினர். இதில் 12 சி.ஆர்.பி.எப். படையினர் உயிரிழந்தனர். இறந்த படையினர் மூவரது உடலில் திரவ வெடிகுண்டு உள்ளிட்ட வெடிகுண்டுகளையும் புதைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆடு, நாய் மூலம் சோதனை
இந்தத் தேடுதல் நடவடிக்கைக்குப் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த மாவோயிஸ்ட் இயக்க முக்கிய உறுப்பினரான பிரபாத் மோசி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போலீசிடம் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில், கடந்த 6 மாத காலமாக நாய்கள் மற்றும் ஆடுகளின் உடல்களில் திரவ வெடிகுண்டுகளை பொருத்தி மாவோயிஸ்டுகள் பரிசோதித்துப் பார்த்தனர். இந்தப் புதிய வியூகம் மூலமாக மாவோயிஸ்டுகளுக்கு எதிராக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடும் படையினரது மன உறுதியைக் குலைக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர் எனக் கூறியுள்ளார்.
கண்ணைத் தோண்டி..
இந்நிலையில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர்களில் ஒருவரான சங்கர்லால் என்பவரது சடலம் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் இருந்திருக்கிறது. சிதைந்திருந்த அந்த உடலில் கண்கள் இல்லாமல் இருந்ததும் நாக்கு துண்டிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. கைகள் பின்புறமாக கட்டப்பட்டிருப்பதால் அனேகமாக அவர் மாவோயிஸ்டுகளிடம் உயிரோடு சிக்கி இருக்கலாம் என்றும் அவர் உயிரோடு இருக்கும் போதே கண்கள் தோண்டப்பட்டு நாக்கு துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.
கூடுதலாக 10 ஆயிரம் பேர்
மாவோயிஸ்டுகளின் இத்தகைய செயல்பாடுகள் மத்திய, மாநில அரசுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லேடகர் வனப்பகுதிதான் மாவோயிஸ்டுகளின் முக்கிய பகுதியாக இருந்து வருகிறது. இந்தப் பகுதியை முற்றுகையிட்டு மாவோயிஸ்டுகளை அப்புறப்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக கூடுதலாக 10 ஆயிரம் சி.ஆர்,பி.எப். வீரர்களை அப்பகுதிக்கு அனுப்பும் உத்தரவை உள்துறை அமைச்சகம் நேற்று பிறப்பித்திருக்கிறது. இதன் மூலம் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டும் மொத்தம் 85ஆயிரம் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். வெளிநாட்டு உதவி இதனிடையே மாவோயிஸ்டுகளின் முகாம்களில் இருந்து பாகிஸ்தான், சீனா தயாரிப்பு ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
பச்சைக் காடுகள் செங்காடுகளாகப் போகின்றனவோ?












Click it and Unblock the Notifications