''எனக்கு கார் தந்து, சீர் தந்து குருச்சேத்திர போரில் இறக்கி விட்டுள்ளார் ஜெயலலிதா'': நாஞ்சில் சம்பத்

Subscribe to Oneindia Tamil

Nanjil Sampath
கடலூர்: எனக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் எனும் பதவி தந்து, கார் தந்து, சீர் தந்து, 52 மாவட்டங்களுக்கும் சென்று வா, நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் எனும் குருச்சேத்திர போரில் வெற்றி ஈட்டி வா! என்று அம்மா என்னை அனுப்பி வைத்துள்ளார் என்று அதிமுகவின் புதிய கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் அதிமுக அரசின் ''நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை'' பொதுக்கூட்டம் திருப்பாதிரிப்புலியூர் சன்னதி தெருவில் நடந்தது.

அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்க, எஎம்எல்ஏக்கள் சொரத்தூர் ராஜேந்திரன், எம்.பி.எஸ். சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகிக்க நாஞ்சில் சம்பத் பேசியதாவது:

இந்திய அரசியலில் தலை நிமிர்ந்து நிற்கும் புரட்சித் தலைவி அமமா, இந்தியாவின் தலைமகளாவார். காலம் கனிந்து விட்டது. எந்த தலைமையை ஏற்றுக் கொண்டதற்காக அடக்குமுறைகளை சந்தித்தேனோ, அந்த தலைமையே என் உயிருக்கு உலை வைக்க நினைத்தபோது, கழுகு விரடடிய மாடப்புறா சிபிச்சக்கரவர்த்தி மடியில் விழுந்தது போல, நான் அம்மாவின் (ஜெயலலிதா) மடியில் விழுந்தேன்.

எனக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் எனும் பதவி தந்து, கார் தந்து, சீர் தந்து, 52 மாவட்டங்களுக்கும் சென்று வா, நாளை நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் எனும் குருச்சேத்திர போரில் வெற்றி ஈட்டி வா! என்று அம்மா என்னை அனுப்பி வைத்துள்ளார்.

காலம் மாறும், காரிருள் உடையும், உறக்கம் கலையும், உணர்வுகள் பூக்கும், சரித்திரம் மாறும், நாளை இந்தியாவின் பிரதமராக ஜெயலலிதாவை அமர வைக்க நாடே தயாராகி விட்டது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக சில பரமபத விளையாட்டுகளை விளையாடி, அதிமுக அரசுக்கு அவப்பெயர் உருவாக்க கருணாநிதி திட்டமிடுகிறார். ஆனால் அது நடக்காது!.

தமிழகத்தில் மின்வெட்டு இருக்கிறது என்பது கசப்பான உண்மை தான்!. ஆனால் இந்த மின்வெட்டுக்கு நாங்களா பொறுப்பேற்க முடியும்? 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முதல்வராக இருந்தபோது, தமிழகம் மிகை மின் மாநிலமாகத்தான் இருந்தது.

அப்போது தமிழகத்துக்கு போக எஞ்சிய 500 மெகாவாட் மின்சாரத்தை மலைகள் சூழ்ந்த மாநிலமான ஜார்கண்ட் மாநிலத்துக்கு விற்பனை செய்து தமிழகத்தின் கஜானாவை நிரப்பியவர் அம்மா.

ஆனால் இப்போது தமிழகத்தின் மின்தேவைக்கும், மின் உற்பத்திக்கும் இடையேயான இடைவெளி 4,000 மெகாவாட் ஆக இருக்கிறது. என்றால் அதற்கு திமுக அரசு தான் காரணம் என்றார்.

ஜெயலலிதாவை பிரதமராக்குவோம்:

இந் நிலையில் கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சிதம்பரத்தில் நடந்த அதிமுக அரசின் ''நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை'' விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய நாஞ்சில் சம்பத்,

கடந்த இரு தினங்களில் 500க்கும் மேற்பட்ட மதிமுக தொண்டர்கள் அதிமுகவில் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் நான் வருக என்று வரவேற்று வாழ்த்துகிறேன். எங்களைப்போல் பலர் மதிமுகவில் இருந்து விரைவில் அதிமுகவில் இணைவார்கள்.

திமுக ஆட்சியின் போது அவரது அமைச்சர்கள் பொறியியல் கல்லூரி கட்டினர். ஆனால் அதிமுக அமைச்சர்கள் எளிமையாக உள்ளனர்.

தமிழகத்தில் தற்போது கடுமையான மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பல தொழில்களும், விவசாயிகளும் பாதிப்படைந்து வருகின்றனர். தமிழக முதல்வர் மத்திய அரசிடம் டெல்லியில் திரும்ப கொடுக்கப்படும் உபரி மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்குங்கள் என்று பலமுறை கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார். ஆனால் மத்திய அரசு அதனை ஒரு பொருட்டகவே எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு இந்தியா மின்சாரத்தை வழங்கப் போவதாக தகவல் வந்துள்ளது. இந்திய பகுதியில் உள்ள தமிழ்நாட்டிற்கு கொடுப்பதற்கு பாதையில்லை, வழியில்லை என்று கூறும் மத்திய அரசு பாகிஸ்தான் நாட்டிற்கு மின்சாரம் வழங்குவது வேடிக்கையாக உள்ளது. இது தமிழகத்தை வஞ்சிக்கும் செயல். இதையெல்லாம் எதிர்கட்சியாக உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த்தோ, கருணாநிதியோ கேட்பதில்லை.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே என வென்று, தமிழக முதல்வர் புரட்சித் தலைவியை பிரதமராக்குவோம். தற்போது மின்வெட்டிற்கு திமுக ஆட்சிதான் காரணம். கடந்த 2001-2006ல் தமிழக முதல்வராக இருந்த அம்மா அவர்கள் வடசென்னை, நெய்வேலி பகுதிகளில் தலா 2,000 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டத்தை தொடங்க திட்டமிட்டார். அதனையடுத்து ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சியில் மக்கள் நலனை கவலைப்படாமலும், விஞ்ஞான ரீதியாக யோசிக்காமலும் அத்திடங்களை கிடப்பில் போட்டவர் கருணாநிதி.

தமிழக அரசை திவாலாக்கிவிட்டு சென்றவர் கருணாநிதி. தற்போது மீண்டும் அம்மாவின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு ஒவ்வொரு துறையாக களைந்து சரி செய்து வருகிறார். கருணாநிதி ஆட்சியில் போக்குவரத்து துறை திவாலானது. தற்போது 3,000 புதிய பேருந்துகளையும், 2,150 புதிய வழித்தடங்களையும் தொடங்கி லாபத்தில் இயக்க நடவடிக்கைகளை கருணைத் தாய் மேற்கொண்டுள்ளார்.

காவிரி பிரச்சனையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் முதல்வர் அம்மா அவர்கள் கர்நாடக முதல்வரிடம் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் தண்ணீர் தர மறுக்கின்றனர்.

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டினால் 21 கோடி விவசாயிகள், 6 கோடி சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். நாடாளுமன்றத்தில் இந்த சட்டத்தை நிறைவேற்ற அனைத்து கட்சி எம்பிக்களும் விலை போனார்கள். ஆனால் இந்தியாவிலேயே விலை போகாத கட்சி எம்பிக்கள், அதிமுக எம்பிக்கள் மட்டும்தான்.

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்த கருணாநிதி நாடாளுமன்றத்தில் அவரது கட்சி அதனை ஆதரித்து வாக்களித்தது. கேட்கும் இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டை, கொடுக்கும் இடத்திற்கு மாற்ற வேண்டும். இதற்கு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நாற்பதிலும் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+