இந்தியா-பாக் இடையே நாளை பேச்சுவார்த்தை… பதற்றத்தை தணிக்க முடிவு
டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்கும் வகையில், பிரிகேடியர் அந்தஸ்திலான கூட்டம், நாளை நடைபெற உள்ளது.
இந்தியா பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு இடையே ஜம்மு காஷ்மீர் மாநில எல்லையில் பூஞ்ச் பகுதியில், சனிக்கிழமை இரவு விடிய விடிய துப்பாக்கிச்சண்டை நடந்தது.
எல்லையில் தீவிரவாதிகள் குழு ஊடுருவ முயற்சிகள் நடைபெற்றதாகவும், இதை இந்திய ராணுவம் முறியடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு முதல் ஏழு பேர் கொண்ட குழு, நேற்றிரவு எல்லைப் பகுதியில் நடமாடுவதை ராணுவம் கண்டுபிடித்தது. இதையடுத்து, அவர்களது ஊடுருவலை தடுக்க அதிகாலை வரை துப்பாக்கிசூடு நடத்தினர். இதற்கு பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இருந்து பதில் தாக்குதலாக துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது.
எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிப்பதற்காக, ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில், பிரிகேடியர் அந்தஸ்திலான இரு நாடுகளில் கமாண்டர்கள் கலந்து கொள்ளும் பேச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த செவ்வாய் கிழமையன்று இந்திய ராணுவ வீரர்கள் இரண்டு பேர் காஷ்மீர் எல்லையில் கொல்லப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, எல்லைப் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. பாகிஸ்தான் வீரர் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக அந்த நாட்டு ராணுவம் கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications