காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு: அரசிதழில் வெளியிட தேவ கௌடா எதிர்ப்பு

காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டு தனது இறுதித் தீர்ப்பை அறிவித்தது. ஆனால், அதை முறைப்படி அமலாக்க அதை முதலில் கெஜட்டில் வெளியிட வேண்டும். அதில் வெளியிடப்பட்டுவிட்டால், அதை நிறைவேற்ற வேண்டிய கடமை கர்நாடகத்துக்கு மேலும் அதிகமாகும்.
ஆனால், இதை கெஜட்டில் வெளியிடாமல் இழுத்தடித்து வருகிறது மத்திய அரசு.
இந் நிலையில் இதை கெஜட்டில் ஏன் வெளியிடவில்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றம் கண்டித்துள்ளது. இதையடுத்து இதை அரசிதழில் வெளியிடுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதை கர்நாடகம் எதிர்க்கிறது.
இந் நிலையில், இந்த விவகாரத்தில் பிரதமரை தேவ கெளடா சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் பேசிய கெளடா,
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து அரை மணி நேரம் பேசினேன். நடப்பு ஆண்டு மே மாதம் இறுதி வரை கர்நாடகத்தில் குடிநீர்ப் பற்றாக்குறை நிலவும்.
இந்த நேரத்தில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டால் கர்நாடகத்துக்கு பாதிப்புகள் ஏற்படும்.
2007ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ள காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கூடாது என்றும் பிரதமரிடம் வலியுறுத்தினேன். எனது பேச்சை பிரதமர் அமைதியுடன் கேட்டார் என்றார் கௌடா.
ஒரு வாரம் அவகாசம் கேரும் கர்நாடகம்:
இந் நிலையில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது தொடர்பாக கர்நாடக அரசின் நிலையைத் தெரிவிக்க ஒரு வார காலம் ஆகும் என்று கர்நாடக அரசு காவிரி கண்காணிப்புக் குழுவிடம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கண்காணிப்புக் குழுவிடம் கர்நாடகம் அளித்துள்ள கடிதத்தில், மகர சங்கராந்தி பண்டிகை கொண்டாடப்படுவதால் மாநில அளவில் கர்நாடக அரசு விடுமுறை அளித்துள்ளது. இதன் காரணமாக கர்நாடக அரசு தனது பதிலை அளிக்க ஒரு வாரம் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளது.
கடந்த 10ம் தேதி நடந்த காவிரிக் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் குழுவின் தலைவர் துருவ் விஜய் சிங் கருத்து கேட்டார்.
தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் அரசிதழில் உத்தரவை வெளியிட ஆதரவு தெரிவித்தன. ஆனால் கர்நாடக அரசின் தலைமைச் செயலர் எஸ்.வி ரங்கநாத், இது குறித்து கர்நாடக முதல்வரிடம் ஆலோசித்து இரண்டு நாள்களில் தங்களது முடிவை தெரிவிப்பதாகக் கூறினார். ஆனால், ஒரு வாரம் ஓடிவிட்ட நிலையில் இன்னும் ஒரு வாரம் டைம் கேட்டுள்ளது கர்நாடகம்.












Click it and Unblock the Notifications