ராணுவ வீரர்கள் கொலையில் உரிய நடவடிக்கை தேவை- பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் மத்திய அரசின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், ஜம்மு பிராந்தியத்தின் மெந்தார் பகுதியில் இரண்டு இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவமும், அவர்களின் உடல்கள் சிதைக்கப்பட்ட சம்பவமும் கடுமையான கண்டனத்துக்குரியது. இந்த ஆத்திரமூட்டும் செயல் கண்டனத்துக்குரியது. இதுபற்றி உரிய விசாரணை நடத்தவும் இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்கவும் பாகிஸ்தான் அரசை கேட்டுக்கொண்டோம்.
ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல், உடனடியாக இந்த வற்புறுத்தலை பாகிஸ்தானிடம் தெரிவித்தார். கடந்த திங்கள்கிழமையன்று நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் பேச்சுவார்த்தையின் போதும் இதே நிலைப்பாடு மீண்டும் வலியுறுத்தப்பட்டது.இந்த பிரச்சினையை, இந்தியா மிகவும் உறுதிப்பாட்டுடன் அணுகி வருகிறது. மிகவும் சீரியசாக, தனது நிலையில் தீவிரமாக இருக்கிறது.
இதனால் இந்தக் கோரச்செயலில் ஈடுபட்ட பாகிஸ்தான் வீரர்களை தண்டிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும். அச்சம்பவத்தை அப்பட்டமாக மறுத்து கொண்டிருப்பதையோ உரிய முறையில் பதில் அளிக்காமல் இருப்பதையோ இந்தியா கண்டுகொள்ளாது என்றோ, இருதரப்பு உறவுகள் பாதிக்கப்படாது என்றோ வழக்கம்போல உறவு தொடரும் என்றோ பாகிஸ்தான் கருதக்கூடாது.
பாகிஸ்தான் ராணுவத்தின் செயல்கள், சர்வதேச நடத்தை நெறிமுறைகளை மீறிய செயல். இச்செயல்கள் ஆத்திரமூட்டுவதுமின்றி இந்தியாவுடனான உறவு சுமூக நிலைக்குத் திரும்புவதில் பாகிஸ்தானுக்கு அக்கறை இல்லை என்ற முடிவுக்கு கொண்டு செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications