பாகிஸ்தானில் கொந்தளிப்பு: கைதாகிறார் பிரதமர்!ஆட்சியைக் கைப்பற்றுகிறது ராணுவம்!!

காத்ரி போராட்டம்
பாகிஸ்தானின் அவாமி தெஹ்ரிக் கட்சியின் தலைவரான தஹீர்- காத்ரி கடந்த மாதம்தான் கனடாவில் இருந்து இஸ்லாமாபாத் திரும்பியிருந்தார். கடந்த சில நாட்களாக ஊழல் புரையோடிக் கிடக்கும் ஆளும் அரசாங்கம் பதவி விலகியாக வேண்டும் - நாடாளுமன்றத்தை உடனே கலைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அந்நாட்டை உலுக்கி எடுத்து வருகின்றனர் காத்ரியும் அவரது ஆதரவாளர்களும்!
பாகிஸ்தானின் நாடாளுமன்றம் முன்பாக நேற்று முதல் காத்ரியும் அவரது ஆதரவாளர்கள் சுமார் 30 ஆயிரம் பேரும் முற்றுகையிட்டுத் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். தாங்கள் நடத்துவது போராட்டம் அல்ல- புரட்சி என்றே காத்ரி பிரகடனப்படுத்தியிருக்கிறா.
இம்ரானுக்கு அழைப்பு
இன்றும் தொடர் போராட்டங்களை நடத்தி வரும் காத்ரியும் அவரது ஆதரவாளர்களும் அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் இம்ரான்கானுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர். இம்ரான்கானும் அவரது தொண்டர்களும் காத்ரியின் போராட்டத்தில் இணைகின்றனர். இம்ரான்கானும் ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை நடத்த முன்வாருங்கள் என்று கோரிவருகிறார்.
உச்சநீதிமன்றம்
காத்ரியின் இந்தப் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அந்நாட்டின் உச்சநீதிமன்றம் இன்னொரு போர் முனையைத் திறந்து வைத்துள்ளது. பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ராப், நீர்வளத்துறை அமைச்சராக இருந்த போது ஊழலில் ஈடுபட்டார் என்ற புகாரின் பேரில் அவர் உட்பட 16 பேரை 24 மணிநேரத்தில் கைது செய்தாக வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு எதிராகவும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
பின்னணியில் ராணுவம்
இருப்பினும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு மற்றும் காத்ரியின் போராடங்களுக்குப் பின்னணியில் ராணுவம் இருக்கிறது என்றே கூறப்படுகிறது. பிரதமர் அஷ்ரப்பின் உதவியாளர் பவத் சவுத்திரி ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், காத்ரி நடத்தும் போராட்டத்துக்கும், சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கும் தொடர்பு இருக்கிறது. இதன் பின்னணியில் ராணுவம் இருக்கிறது. ஆட்சியை கைப்பற்ற ராணுவ அதிகாரிகள் ஆசைப்படுகின்றனர் என்றார் அவர். ஆனால் ராணுவ தலைமை தளபதி கயானியோ, அரசியலில் இருந்து ராணுவம் விலகியே இருக்கிறது என்கிறார்.
பிரதமர் கைது?
இதனிடையே பிரதமர் ராஜா பர்வேஸ் அஷ்ரப் கைது செய்யப்பட்டுவிடுவார் என்றே கூறப்படுகிறது. பிரதமர் கைது செய்யப்பட்ட பிறகு ஏற்படும் அசாதாரண சூழ்நிலையின் போது ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றுமா? அல்லது புதிய பிரதமர் தேர்வு செய்யப்படுவாரா என பரபரப்பாகவும் பதற்றமாகவும் இருக்கிறது பாகிஸ்தான்.












Click it and Unblock the Notifications