நண்பருக்கு சீட் கிடைக்காததால் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய கோவைக்காரர்
ஈரோடு: நண்பருக்கு இடம் கிடைக்காததால் 40 வயது நபர் ஒருவர் சென்னையில் இருந்து கோவை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலின் அபாய சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்தினார்.
சென்னையில் இருந்து கோவைக்கு நேற்று காலை எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று கிளம்பியது. ரயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் ரயில் நண்பகல் 12 மணிக்கு ஈரோடு ரயில் நிலையம் அருகே இருக்கும் காவேரி பாலத்தில் செல்கையில் பயணி ஒருவர் திடீர் என்று அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தார். உடனே என்ஜின் டிரைவர் ரயிலை நிறுத்தினார்.
ரயில் பாலத்தில் நின்றதால் பயணிகள் பீதி அடைந்தனர். மேலும் அபாய சங்கிலியைப் பிடித்து இழுக்கப்பட்டதால் ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்று பயணிகள் நினைத்தனர். இதற்கிடையே இது குறித்து ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் கொடுக்ககப்பட்டது. தகவல் கிடைத்த உடன் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய கோவையைச் சேர்ந்த அர்த்தனாரி(40) என்பவரை பிடித்து தங்கள் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
விசாரணையில் அவர் கூறியதாவது,
நான் 5வது பெட்டியில் பயணம் செய்தேன். காத்திருப்போர் பட்டியலில் இருந்த எனது நண்பருக்கு இருக்கை கொடுக்காததால் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தேன் என்றார்.
அர்த்தனாரி தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார் என்று கூறப்படுகிறது. ரயில் பாலத்தில் நின்றுவிட்டதால் அதனைத் தொடர்ந்து வந்த துரந்தோ எக்ஸ்பிரஸ் ஆனங்கூர் ரயில் நிலையத்திலும், சபரிமலைக்கு விடப்பட்ட சிறப்பு ரயில் மகுடஞ்சாவடி ரயில் நிலையத்திலும் நிறுத்தப்பட்டன. இதையடுத்து அனைத்து ரயில்களும் 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.












Click it and Unblock the Notifications