எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்திய, பாக். ராணுவ தலைமையகங்கள் ஒப்புதல்

கடந்த ஜனவரி 6-ந் தேதியன்று இந்திய நிலைகள் மீது எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதலைத் தொடுத்தது. இதற்கு இந்தியா பதிலடி தந்தது. பின்னர் ஜனவரி 8-ந் தேதியன்று இந்தியப் பகுதிக்குள் ஊடுருவி இரு இந்திய ராணுவத்தினரைப் படுகொலை செய்ததுடன் ஒரு வீரரது தலையைத் துண்டித்து எடுத்துச் சென்றது பாகிஸ்தான். இதற்கும் இந்தியத் தரப்பில் பதிலடி தரப்பட்டது. மேலும் ராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் இந்தியத் தரப்பில் எச்சரிக்கைவிடப்பட்டும் பாகிஸ்தானின் அத்துமீறல் ஓயவில்லை. இந்த ஜனவரி மாதம் மட்டும் எல்லைப் பகுதி மோதலில் இருதரப்பிலுமாக மொத்தம் 5 பேர் பலியாகி இருக்கின்றனர்.
சில நாட்களுக்கு முன்பாக பிரிகேடியர்கள் நிலையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தும் அது தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில் இந்தியா, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல்களான லெப். ஜெனரல் வினோத் பாட்டியா மற்றும் மேஜர் ஜெனரல் அஷாப் நதீம் இருவரும் நேற்று புதன்கிழமை காலை 10 மணியளவில் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 10 நிமிடம் நேரம் நீடித்த இப்பேச்சுவார்த்தையில் இருதரப்பும் பதற்றத்தைத் தணிக்க ஒப்புக் கொண்டனர்.
மேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்குமாறு தமது படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் தணியக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications