கருணாநிதியிடன் வாழ்த்துப் பெற்ற பரிதி இளம்வழுதி! கண்காணிக்கும் ஸ்டாலின் ஆதரவாளர்கள்!

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி உயர் அதிகாரிகளை அரசு அதிகாரிகள் சந்திப்பது வழக்கமான நடைமுறை. அதேபோல் தை 1-ந் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கடைபிடித்து வரும் திமுகவினரும் அன்றைய நாளில் கட்சித் தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெறுவது வழக்கம்.
கருணாநிதியிடம் மு.க.ஸ்டாலின், தயாநிதி மாறன், அமிர்தம், மகள் செல்வி, மகன் மு.க. தமிழரசு ஆகியோர் குடும்பத்தோடு 'சந்தித்து' ஆசி பெற்றனர். இதேபோல் கட்சி நிர்வாகிகள் பலரும் கருணாநிதியை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இந்த வாழ்த்துப் பெற்றோர் பட்டியலில் இடம்பிடித்தவர்களில் ஒருவர் பரிதி இளம்வழுதி!
ஆம் திமுகவில் உட்கட்சி ஜனநாயகமே இல்லை.. கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இல்லை என்றுகூறி தாம் வகித்து வந்த துணைப் பொதுச்செயலர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டுப் போன அதே பரிதி இளம்வழுதிதான் மீண்டும் ஐக்கியமாகிவிட்டார்!
வனவாசம் போன பரிதி
கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தலின் போது திமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் யார் என்ற பட்டியலை கட்சித் தலைமையிடம் பரிதி இளம்வழுதி கொடுத்திருந்தார். அவர் பரிந்துரைப்படி கட்சியிலிருந்து சிலர் நீக்கப்பட்டனர். ஆனால் நீக்கப்பட்டவர்கள் அனைவரும் ஸ்டாலினின் பரிந்துரையின் அடிப்படையில் சில நாட்களிலேயே திமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
சிக்னல் கிடைத்தது
இதனால் கடுப்பாகிப் போன பரிதி இளம்வழுதி, திமுகவை விமர்சித்து தமது சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள கட்சிப் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றார். திமுக தலைமையும் பரிதியை கண்டு கொள்ளாமல் திமுக துணைப் பொதுச்செயலர் பதவிக்கு புதிய நபர்களை நியமித்துவிட்டது. இதில் இன்னமும் கடுப்பாகி வனவாசம் போய்விட்டார்.
தொடர்ந்து பல மாதங்கள் தீவிர அரசியலைத் துறந்து கிடந்த பரிதி இளம்வழுதி, திடீரென சில மாதங்களுக்கு முன்பு கருணாநிதியை திருமண விழா ஒன்றில் சந்தித்துப் பேசி சிக்னல் பெற்றுக் கொண்டார்.
இந்த சிக்னலைத் தொடர்ந்து கடந்த 14-ந் தேதியன்று கருணாநிதியிடம் வாழ்த்துப் பெற்று தமது ஐக்கியத்தை நிலைநாட்டிச் சென்றிருக்கிறார் அவர்.
தாக்குப் பிடிப்பாரா பரிதி?
திமுகவில் ஸ்டாலினை எதிர்த்து சென்னையில் குரல் கொடுத்தவர் பரிதி இளம்வழுதிதான். ஸ்டாலினுடனான மோதலில்தான் அவர் திமுக கட்சிப் பதவியை தூக்கி எறிந்துவிட்டு வனவாசம் போயிருந்தார். தற்போது திமுகவின் அடுத்த தலைவர் மு.க. ஸ்டாலின்தான் என்ற நிலையில் பரிதி மீண்டும் கட்சிக்குள் நுழைந்திருக்கிறார். அதனால் அவரது எதிர்காலம் ஒன்றும் பிரகாசமாக இருக்கப் போவது இல்லைதான் என்றே கூறப்படுகிறது. இருப்பினும் கருணாநிதி- அழகிரி மோதல் உச்சகட்ட நிலையில் இருக்கும் நிலையில் ஸ்டாலினின் எதிர்ப்பாளரான பரிதியின் மறுபிரவேசம் அவரை ஸ்டாலின் ஆதரவாளர்களின் 'கண்காணிப்பு' பட்டியலில் வைத்திருக்கிறது என்பதே நிதர்சனம்












Click it and Unblock the Notifications