பெற்றோரால் கட்சியில் நம்பர் 2 ஆன முதல் 'காந்தி' - ராகுல்தான்...!

காங்கிரஸ் கட்சியின் வரலாறு ஒன்னே கால் நூற்றாண்டாகும். வெள்ளையரால் ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சி இன்று நேரு- இந்திரா குடும்பத்தின் கையில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இடை இடையே வேறு சில தலைவர்கள் வந்திருந்தாலும் கூட காங்கிரஸ் கட்சி என்றால் அது நேரு- இந்திரா காந்தி குடும்பத்துக் கட்சியாகவே பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி பிறந்தது முதல் இதுவரை நடந்திராத ஒன்றாக ராகுல் காந்தியின் நியமனம் அமைந்துள்ளது. இதுவரை காங்கிரஸ் தலைவராக இருந்த யாருடைய வாரிசும், துணைத் தலைவராக அதாவது தலைவருக்கு அடுத்த நிலைத் தலைவராக நியமிக்கப்பட்டதில்லை. அந்த வகையில் சோனியா காந்தியின் தலைமையில், அவரது மகன் ராகுல் காந்தி துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் தலைவராகவும், இன்னொருவர் துணைத் தலைவராக மாறியிருப்பதும் இதுவே முதல் முறையாகும். அந்த வகையிலும் ராகுல் காந்தி சாதனை படைத்துள்ளார்.
நேரு தலைவராக இருந்தபோது இந்திரா காந்தியை தனது வாரிசாக அவர் முன்னிறுத்தியதில்லை. அதேபோல இந்திரா தலைவராக இருந்தபோதும் ராஜீவை அவர் முன்னிறுத்தியதில்லை. சஞ்சய் காந்தியைக் கூட அவர் பெரிதாக முன்னிறுத்தியதில்லை. அதேபோல ராஜீவ் காந்தி தலைவராக இருந்தபோதும் கூட சோனியாவை முன்னிறுத்தியதில்லை. போகும் இடமெல்லாம் கூட கூட்டிப் போனார், அவ்வளவுதான்.
ஆனால் தற்போது சோனியா காந்தி, தனது மகன் ராகுல் காந்தியை துணைத் தலைவராக்கி தனக்கு அடுத்து இவர்தான் என்பதை அனைவருக்கும் உணர்த்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications