ஜாதியிலிருந்து ஈழத்திற்குத் தாவிய ராமதாஸ்!

சமீப காலமாக ஜாதி அரசியலை நடத்தி வரும் டாக்டர் ராமதாஸ் திடீரென மீண்டும் ஈழத் தமிழர்கள் குறித்து அக்கறை காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையில் போர் முடிந்து 4 ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், ஒரு லட்சத்திற்கும் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இன்று வரை நீதி வழங்கப்படவில்லை. இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற உலக நாடுகளின் கோரிக்கைகளை இலங்கை அரசு தட்டிக் கழித்து வருகிறது.
கடந்த ஆண்டு ஜெனிவா நகரில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில், இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக அந்நாட்டு அரசே விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், அதன்பின் ஓராண்டாகிவிட்ட நிலையில், இலங்கையின் மனித உரிமைச் சூழலில் எந்த ஒரு முன்னேற்றமும் தென்படவில்லை. ஐ.நா. மனித உரிமை ஆணையக்குழு இலங்கை சென்ற போது, அதன் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்த ராஜபக்சே அரசு, மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளையின் இலங்கைப் பயணத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தர மறுத்து வருகிறது.
அதுமட்டுமின்றி, போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்கவும், மனித உரிமைகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய இலங்கை அரசு, அதை செய்யாமல் மனித உரிமைகளுக்கு எதிரான செயல்களிலும், தமிழர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைதியான முறையில் மாவீரர்நாள் நிகழ்ச்சிகளை நடத்திய தமிழ் மாணவர்களை கைது செய்து கொடுமைப்படுத்துதல், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துதல், தமிழ் பெண்களை கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்த்து அடிமைகளைப் போல நடத்துதல், தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் 10 மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்ற விகிதத்தில் படையினரை நிறுத்தி தமிழர்களின் சுதந்திரத்தைப் பறித்தல்,
தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் சட்டத்திற்கு அனுமதி மறுத்ததற்காக இலங்கை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்தது, தமிழர்கள் வாழும் பகுதிகளை சிங்களமயமாக்குவது என இலங்கை அரசு தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது.
இலங்கை அரசின் இந்த போக்கை ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளையும், மற்ற உலகத் தலைவர்களும் கடுமையாக கண்டித்திருக்கின்றனர். ஆனால், இந்திய அரசு இதை இன்று வரை கண்டிக்காதது மிகுந்த வேதனை அளிக்கிறது.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக அந்நாட்டின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்பு தற்போது கிடைத்திருக்கிறது. வரும் பிப்ரவரி மாதம் 25ம் தேதி முதல் மார்ச் 23ம் தேதி வரை ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் 22வது கூட்டத்தில், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் , இந்தக் குற்றச்சாற்றுகள் மீது கடந்த ஓராண்டு காலத்தில் இலங்கை அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படவிருக்கிறது.
அப்போது போர்க்குற்றச்சாற்றுகள் குறித்து இலங்கை அரசு முறையாக விசாரணை நடத்தாததால், இது குறித்து சர்வதேச விசாரணைக்கு ஆணையிடக் கோரும் தீர்மானத்தை இந்தியா கொண்டுவர வேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும்.
கடந்த ஆண்டு மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரிக்க மத்திய அரசு தயங்கியது. அப்போது, தமிழக அரசியல் கட்சிகள் கொடுத்த நெருக்கடியால் தான், வேறுவழியின்றி தீர்மானத்தை ஆதரிக்க ஒப்புக்கொண்டது. அதேபோல், இப்போதும் மத்திய அரசை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படவைக்க தமிழக கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications