என்னுடைய நண்பர்களே எனது பாட்டியைக் கொன்றபோது நொறுங்கி விட்டேன்-ராகுல்
ஜெய்ப்பூர்: எனது பாட்டியின் 2 பாதுகாவலர்கள் என்னோடு பேட்மிண்டன் விளையாடினார்கள். மகிழ்ச்சியோடு அவர்களுடன் நான் விளையாடுவேன். ஆனால் திடீரென ஒரு நாள் எனது பாட்டியை அவர்கள் சுட்டுக் கொன்று விட்டனர். எனது மகிழ்ச்சியையும் அபகரித்துச் சென்று விட்டனர் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
ஜெய்ப்பூரில் நேற்று முடிவடைந்த காங்கிரஸ் சிந்தனைக் கூட்டத்தில் உருக்கமான உரையாற்றினார் ராகுல் காந்தி. அந்த உரையில் கட்சிக்காகவும், நாட்டுக்காகவும் தனது குடும்பம் செய்த தியாகங்களை அவர் எடுத்துரைத்தார்.
தனது பாட்டி இந்திரா காந்தி குறித்தும், தந்தை ராஜீவ் காந்தி குறித்தும் அவர் பேசியது மிகவும் உருக்கமாக அமைந்தது.

நண்பர்களே சுட்டுக் கொன்றனர்
எனக்கு பாட்மிண்டன் மிகவும் பிடிக்கும். எனது பாட்டியின் வீட்டில் இருந்தபோது அங்கிருந்த 2 பாதுகாவலர்கள் என்னுடன் பாட்மிண்டன் விளையாடுவார்கள். நண்பர்கள் போலப் பழகினார்கள். அது எனக்கு மகிழ்ச்சியையும், நிம்மதியையும் கொடுத்தது. ஆனால் ஒரு நாள் அவர்கள் எனது பாட்டியை சுட்டுக் கொன்று விட்டனர். எனது மகிழ்ச்சியும் பறி போய் விட்டது.

எல்லாவற்றையும் இழந்தது போல உணர்ந்தேன்
எனது பாட்டியின் மரணம் என்னை சிதறடித்து விட்டது. எல்லாவற்றையும் இழந்து விட்டது போல சோகமாக உணர்ந்தேன்.

என் தந்தை அழுதது வியப்பளித்தது
என் தந்தை மிகவும் தைரியமானவர், உறுதியானவர், எதற்குமே கலங்காதவர். தனது தாயார் கொல்லப்பட்டபோது அவர் மேற்கு வங்கத்தில் இருந்தார். தகவல் அறிந்து அவர் ஓடி வந்தார். தனது தாயாரின் பிரேதத்தைப் பார்த்து அவர் கதறி அழுதது எனக்கு ஆச்சரியம் தந்தது. எனது தந்தை அழுததை அப்போதுதான் நான் முதல் முறையாக பார்ததேன். நான் சிறுவன்தான் அப்போது. ஆனால் எனது தந்தை சிறுவன் போல கதறி அழுதார்.

இப்போதிருந்தது போல அப்போது நாம் இல்லை
நமது நாடு இப்போது இருப்பதைப் போல அப்போது இல்லை. நம்மைப் பற்றி யாருமே கவலைப்படவில்லை. நமக்கு முன்பு இருந்த சவால்கள் மிகப் பெரிதானவை. ஆனால் எனது தந்தை அதை தைரியமாக எதிர்கொண்டார். அன்று மாலை அவர் டிவியில் தைரியமாக உரையாற்றினார். அனைவருக்கும் நம்பிக்கை வந்தது.

நம்பிக்கை ஒளிக்கீற்று
மனதுக்குள் உடைந்து போயிருந்தாலும் மிகுந்த நம்பிக்கையுடன் எனது தந்தை பேசினார். அப்போது இருள் சூழ்ந்த வானில் ஒளிக்கீற்று புறப்பட்டதைப் போல அந்த பேச்சு இருந்தது. அந்த நம்பிக்கை ஒளிக்கீற்றுதான் என்னையும் வழி நடத்துவதாக உணர்கிறேன்.

விஷத்தை மக்களுக்கான அமிர்தமாக்க வேண்டும்
எனது தாயார் அதிகாரத்தையும், பதவியையும் விஷம் என்று கருதுகிறார். அதனால்தான் அதனுடன் அவர் இணைந்திருக்கவில்லை. ஆனால் அந்த விஷத்தை நாம் மக்களுக்கான அமிர்தமாக மாற்றித் தர வேண்டும். அந்த அதிகாரத்தை வைத்து மக்களை அதிகாரம் மிக்கவர்களாக மாற்ற வேண்டும்.

8 வருட அனுபவம் உதவும்
8 வருட கால அரசியல் அனுபவத்துடன் 42 வயதில் இருக்கும் நான் எனக்கு அன்று கிடைத்த நம்பி்க்கை ஒளிக்கீற்றை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அந்த நம்பிக்கை கீற்றுதான் அன்றைய இந்தியாவை மாற்றியமைத்தது. அதேபோல வருங்கால இந்தியாவையும் நாம் மாற்றியமைப்போம்.

மிகப் பெரிய பொறுப்பு
என் முன்பு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. அதை நான் உணர்ந்துள்ளேன். மக்கள் அனைவரும் என் பக்கம் இருப்பார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது. நம்பிக்கை இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது. நம்மிடம் திட்டங்கள் உள்ளன. நல்ல யோசனைகள் உள்ளன. ஆனால் அவை நிறைவேறும் என்ற நம்பிக்கை இல்லாமல் எதையும் சாதிக்க முடியாது.

நம்பிக்கையின் அடையாளம் காங்கிரஸ்
நம்பிக்கையின் சின்னம்தான் காங்கிரஸ். காங்கிரஸ் கட்சிதான் எனது வாழ்க்கை. இந்திய மக்கள்தான் எனது வாழ்க்கை. இந்திய மக்களுக்காக நான் போராடுவேன். இந்தக் கட்சிக்காக பாடுபடுவேன் என்றார் ராகுல் காந்தி.

'ஐபி' ராமனின் பாராட்டு
ராகுல் காந்தியின் பேச்சுக்கு உடனடியாக முன்னாள் ஐபி தலைவர் ராமனிடமிருந்து பாராட்டு வந்தது. அவர் தனது ட்விட்டர் செய்தியில், அருமையான பேச்சு. மிகச் சிறப்பான பேச்சு, அழகான வார்த்தைகள், மிகச் சிறந்த, உணர்ச்சிகரமான பேச்சு. நிச்சயம் ராகுலின் எதிர்ப்பாளர்கள் ஆச்சரியமடைந்து போயிருப்பார்கள் என்று கூறியிருந்தார் ராமன்.












Click it and Unblock the Notifications