ராகுலிடம் அமர்ந்து சோனியா காந்தி அழுதபோது...!
ஜெய்ப்பூர்: எல்லோரும் எனக்குப் பதவி கிடைத்ததற்காகப் பாராட்டி மகிழ்கிறீர்கள். ஆனால் எனது தாயார் அதை நினைத்து எனது அருகே அமர்ந்து அழுதார். பதவி விஷம் என்பது அவருக்குத் தெரியும் என்று ராகுல் காந்தி பேசியபோது காங்கிரஸ் சிந்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் உணர்ச்சிவசப்பட்டனர்.
ஜெய்ப்பூரில் நடந்த காங்கிரஸ் சிந்தனைக் கூட்டத்தின் 2வது நாள் இறுதியில் ராகுல் காந்தியைத் துணைத் தலைவராக தேர்ந்தெடுத்தனர். நேற்று நடந்த 3வது நாள் கூட்டத்தில் அவர் துணைத் தலைவராக உரையாற்றினார்.
ராகுல் காந்தியின் பேச்சு முழுக்க உணர்ச்சிகரமாக இருந்தது. குறிப்பாக தனது பாட்டி இந்திரா காந்தி குறித்தும், தாயார் சோனியா காந்தி குறித்தும் அவர் பேசியது உணர்ச்சிகரமாக இருந்தது.
ராகுலின் பேச்சிலிருந்து சில பகுதிகள்...

அம்மாவுக்கு மகிழ்ச்சி இல்லை
நீங்கள் எல்லோரும் எனக்குப் பதவி கிடைத்ததற்காக மகிழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். பாராட்டிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் எனது தாயார் மகிழவில்லை.

என்னிடம் வந்து அழுதார்
நேற்று எனது அறைக்கு வந்த எனது தாயார், என் அருகே அமர்ந்து அழுதார். அவர் அழுத்தது ஏன் தெரியுமா... பதவி என்பது விஷம். அதை நினைத்து அவர் அழுதார். ஆனால் எல்லோரும் இந்த விஷத்தைத்தானே தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்றார் ராகுல்.

2 உயிர்களைக் கொடுத்த காந்தி குடும்பம்
சோனியா காந்தி அழுததற்கு என்ன காரணம் என்பதை விளக்கி் சொல்ல வேண்டியதில்லை. தனது மாமியார் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகியோரை நினைத்தே அவர் அழுதிருப்பார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே..

பாதுகாவலர்களால் கொல்லப்பட்ட இந்திரா காந்தி
இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது தனது மெய்காப்பாளர்களான சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டு்க கொல்லப்பட்டார். அமிர்தசரஸ் பொற்கோவிலில் ராணுவத்தை அனுப்பி தீவிரவாதிகளை அழித்ததற்காக இந்திரா காந்தி சுடப்பட்டார்.

ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்ட ராஜீவ் காந்தி
அதேபோல ராஜீவ் காந்தி, தேர்தல் பிரசாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூருக்கு வந்திருந்தபோது அங்கு மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இந்த இரு உயிர்த் தியாகங்களையும் நினைத்தே ராகுலிடம் வந்து அழுதிருக்கிறார் சோனியா காந்தி என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications