கர்நாடகத்தால் தமிழகத்துக்கு இழப்பு - ஈடுசெய்ய சிவில் வழக்கைத் தொடர முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டின் உயிர்மூச்சுப் பிரச்சனையாக விளங்குவது காவிரி நதிநீர்ப் பிரச்சனை. தமிழ்நாட்டில் கால்வாய்ப் பாசனத்தைச் சார்ந்த நிலங்களில் பெரும்பாலான நிலங்கள் காவிரி நீரை நம்பியுள்ளன. காவிரி நீரை உபயோகிப்பதில், தமிழ்நாட்டுக்குள்ள உரிமை மிகவும் பழமை வாய்ந்தது, மரபுரிமைப்படி இயல்பாக நமக்கு கிடைக்க வேண்டியது. அவ்வுரிமை, தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையே ஏற்பட்ட 1892-ஆம் ஆண்டு மற்றும் 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடப்பு பாசன ஆண்டில், கர்நாடக அரசு தற்போது நடைமுறையில் உள்ள காவிரி நடுவர் மன்ற இடைக்கால ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு நீரை அளிக்க முன்வராத நிலையில், காவிரி நடுவர் மன்றத்தின் 3.4.1992-ஆம் நாளிட்ட ஆணையின்படி சரிசம விகிதாச்சார முறைப்படி நீரை விடுவிக்க வேண்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு நான் அறிவுறுத்தியதற்கிணங்க, தமிழக அரசால் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
எனது தொடர் வலியுறுத்தல் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தலையீடு காரணமாக, கர்நாடக அரசு கட்டாயப்படுத்தப்பட்டு நீரை விடுவித்து வந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் 26.11.2012 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இரு மாநில விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இரு மாநில முதலமைச்சர்களும் பேச்சுவார்த்தையின் வாயிலாக தீர்வு காண உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தது.
இதனையடுத்து, நான் பெங்களூருக்குச் சென்று கர்நாடக முதல்வருடன் 29.11.2012 அன்று பேச்சுவார்த்தை நடத்தினேன். இந்தப் பேச்சுவார்த்தையின் போது, தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரில் ஏற்பட்டுள்ள 53.4 டி.எம்.சி.அடி நீரை டிசம்பர் மாதத்திற்குள் விடுவிக்க வேண்டும் என்றும், உடனடித் தேவையாக அடுத்த 15 நாட்களுக்குள் 30 டி.எம்.சி. அடி நீரை விடுவிக்க வேண்டும் என்றும், கர்நாடக முதல்வரை நான் வலியுறுத்தினேன். ஆனால், கர்நாடக அரசு ஒரு சொட்டு நீரைக் கூட விடுவிக்க இயலாது என தெரிவித்தது.
எனவே, எனது உத்தரவின் பேரில், சம்பா பயிர்களைக் காப்பாற்றுவதற்காக ஏற்கெனவே இருந்து வருகின்ற குறைபாட்டு நீரில் குறைந்தபட்சமாக 30 டி.எம்.சி. அடி நீரையாவது 15.12.2012-க்குள் தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டும் என்று கோரும் மனு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவினை 5.12.2012 அன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி கண்காணிப்புக் குழு உடனடியாகக் கூடி தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்கு தேவைப்படக்கூடிய நீர் குறித்து அன்றே முடிவு செய்யுமாறு ஆணையிட்டது.
இதனடிப்படையில் 7.12.2012 அன்று கூடிய கண்காணிப்புக் குழு, தமிழ்நாடு அதன் பயிர்களை காப்பாற்றுவதற்காக உடனடியாக 36 டி.எம்.சி.அடி நீரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல், 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், 12 டி.எம்.சி.அடி நீரை தமிழகத்திற்கு விடுவிப்பதை கர்நாடக அரசு உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இந்த கூட்டத்தின் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் தனது 10.12.2012 நாளைய ஆணையில் பதிவு செய்துள்ளது.
கண்காணிப்புக் குழுவின் முடிவினை உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு மீண்டும் எடுத்துச் செல்லும் வகையில், தமிழ்நாட்டிற்கு நீர் விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள குறைபாட்டு நீரை விடுவிக்க வேண்டும் அல்லது காவிரி கண்காணிப்புக் குழு 12 டி.எம்.சி. அடி நீரை விடுவிக்க வேண்டும் என்பதை தவிர்த்து குறைந்தபட்சமாக 18 டி.எம்.சி.அடி நீரை கர்நாடக அரசு விடுவிக்க வேண்டும் என்று கோரி மேலும் ஒரு மனு தமிழக அரசால் 20.12.2012 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவினை 4.1.2013 அன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், கண்காணிப்புக் குழு கூடி, கர்நாடகம், தமிழகத்திற்கு விடுவிக்க வேண்டிய குறைபாட்டு நீர் உட்பட, தமிழக - கர்நாடக பயிர்களுக்கு தேவைப்படக்கூடிய நீர் குறித்து உரிய ஆணை வழங்கலாம் என உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவின் அடிப்படையில், 10.1.2013 அன்று நடைபெற்ற கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், தமிழகத்திற்கு 1.6.2012 முதல் 31.12.2012 வரையில், பில்லிகுண்டுலு நீரளவு நிலைய கணக்கீட்டுப்படி, இடர்ப்பாடு கால சரிசம விகிதாச்சார முறையின் அடிப்படையில், கர்நாடகா விடுவிக்க வேண்டிய நீரில் 31.4 டி.எம்.சி.அடி நீர் குறைபாடு ஏற்பட்டுள்ளது எனவும், காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்கால ஆணைப்படி நீரை ஒழுங்குமுறைப்படுத்தி கர்நாடகா விடுவிக்கவில்லை எனவும், அதன் நடவடிக்கை குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து எனது உத்தரவின் பேரில், ஓரளவேனும் பயிர்களை காப்பாற்றும் பொருட்டு, கர்நாடக அரசு உடனடியாக 12 டி.எம்.சி.அடி நீரை விடுவிக்க ஆணை பிறப்பிக்க வேண்டி மேலும் ஒரு மனு 17.1.2013 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு அதனை உடனடியாக விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று 18.1.2013 அன்று உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. உச்ச நீதிமன்றம் இந்த மனுவினை 28.1.2013 அன்று விசாரிக்க உள்ளது.
கர்நாடகம் உரிய முறையில் நீரினை தனது நான்கு நீர்த்தேக்கங்களிலிருந்து தமிழகத்திற்கு நடப்பாண்டில் விடுவிக்காததால் குறுவை மற்றும் சம்பா சாகுபடி பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியது. இதைத் தவிர, புனல் மின் உற்பத்தியும் பாதிப்படைந்துள்ளது.
இது மட்டுமல்லாமல், தனது பிடிவாதப் போக்கின் காரணமாக நடைமுறையில் உள்ள காவிரி நடுவர் மன்ற ஆணைகளின்படி தமிழகத்திற்குரிய நீரினை கர்நாடகம் விடுவிக்காததைக் கருத்தில் கொண்டும், கர்நாடக அரசு உரிய நீரை தமிழகத்திற்கு வழங்கவில்லை என காவிரி கண்காணிப்புக் குழு பதிவு செய்துள்ளதன் அடிப்படையிலும், தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டினை கர்நாடகம் ஈடு செய்யும் வகையில் ஒரு சிவில் வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நான் உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications