டெல்லியில் இலங்கை அமைச்சரிடம் போர்க்குற்றம் குறித்து விசாரணை: வேல்முருகன் வலியுறுத்தல்!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் நாளை டெல்லிக்கு வருகைதர உள்ளார். இந்தியா- இலங்கை இடையேயான வர்த்தக உறவு பற்றிய இரண்டு நாள் மாநாடு போட்டுப் பேசப் போகிறார்களாம்! லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்றுகுவித்த போர்க்குற்றவாளி ராஜபக்சே அரசாங்கம் மீது பொருளாதாரத் தடை கோரி தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் மவுனி மன்மோகன்சிங் அரசு கோடிக்கணக்கான தமிழர்களின் உணர்வுகளைக் காயப்படுத்திக் கொண்டு ரத்தக்கறை படிந்த சிங்களவனோடு கை குலுக்கிக் கொண்டு வர்த்தக நலன் பற்றி பேசுகிறார்களாம்!
இலங்கையில் கொன்று குவிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரி சர்வதேச சமூகமே கரிசனை காட்டி வருகிறது. போர்க் குற்றங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் அவையத்தின் மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஓராண்டாகிவிட்டது! ஆனால் ஒரு துரும்பையும் அசைத்துக் கூடப் போடாத சிங்கள ராஜபக்சே அரசின் அமைச்சர்களை டெல்லிக்கு வரவழைத்து லாப நட்டக் கணக்குப் பார்த்துக் கொண்டிருக்கிறது மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் துரோக அரசு!
இலங்கையின் தமிழீழ நிலப்பரப்பெங்கும் சிங்களர் மயம்! தமிழீழத் தேசமெங்கும் சிங்கள மொழி மயம்! தமிழரின் சொந்தத் தாயகத்திலேயே அவர்களது குடிப்பரம்பலைக் குறைக்க திணிக்கப்படும் சிங்களக் குடியேற்றங்கள்! இதைப் பற்றி கோடிக்கணக்கான தமிழ்நாட்டுத் தமிழர்கள் கொந்தளித்துக் குமுறுவதெல்லாம் கள்ள மவுனி மன்மோகன்சிங் அரசுக்குத் தெரியவில்லை! இதோ அடுத்த மாதம் பிப்ரவரியில் மீண்டும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கூட்டம் வருகிறது! இப்போதும் கூட சிங்கள அரசிடம் போர்க்குற்ற நடவடிக்கைக்கான விளக்கம் கோரவில்லை மத்திய அரசு! டெல்லி வருகை தரும் சிங்கள அமைச்சர் ஜி.எல். பீரிஸிடம் வர்த்தக நலன் பேசுவத்தைக் கைவிட்டு தமிழர் வாழ்வுரிமை, போர்க்குற்றவாளிகள் மீதான நடவடிக்கை பற்றி மத்திய அரசு பேச வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications