தலைவர் பதவிக்கான வேட்புமனுவை வேண்டுமென்றே நிராகரித்துவிட்டது பாஜக: மகேஷ் ஜெத்மலானி
பாஜகவின் தலைவராக மீண்டும் நிதின் கத்காரியை தேர்ந்தெடுத்துவிடுவது என்ற முடிவில் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். உறுதியாக உள்ளது. இதனாலேயே சுஷ்மா ஸ்வராஜ் அல்லது ரவிசங்கர் பிரசாத்தை முன்னிறுத்த முயன்ற மூத்த பாஜக தலைவர் எல்.கே. அத்வானியின் நகர்வுகளையும் தோற்கடித்தது ஆர்.எஸ்.எஸ்.
இருப்பினும் ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான நிதின் கத்காரிக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் மகேஷ் ஜெத்மலானி தாம் தலைவர் பதவிக்கு போட்டியிடுவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அவர் அறிவித்தது போலவே வேட்புமனுவையும் தாக்கல் செய்தார். ஆனால் அவரது வேட்புமனுவை ஏற்க பாஜக மறுத்துவிட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்த மகேஷ் ஜெத்மானி, முதலில் எனது வேட்புமனுவில் 20 பேர் ஆதரவு தெரிவித்திருக்க வேண்டும் என்று கூறினர். தற்போது 100 பேர் கண்டிப்பாக ஆதரவு தெரிவித்தால்தான் வேட்புமனுவையே ஏற்போம் என்கின்றனர். இது என்ன ஜனநாயக அமைப்பு முறை என்று தெரியவில்லை? என்று குமுறியிருக்கிறார்.