மைனர் பெண்ணை ஏமாற்றி ஒன்றரை ஆண்டுகள் குடும்பம் நடத்திவிட்டு தலைமறைவான எம்.இ. மாணவர்
விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூரில் மைனர் பெண்ணை ஏமாற்றி ஒன்றரை ஆண்டுகளாக குடும்பம் நடத்திவிட்டு தலைமறைவான எம்.இ. மாணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள சாமியார் காலனியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் சுந்தரேஸ்வரன்(24). அவர் கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பொறியியல் அதாவது எம்.இ. இரண்டாவது ஆண்டு படிக்கிறார். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இருளப்பன் என்பவரின் மகள் விஜயலட்சுமிக்கும்(17) இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சுந்தரேஸ்வரன் விஜயலட்சுமியை ஸ்ரீவில்லிபுத்தூர், தெற்குரத வீதியில் உள்ள அன்னை பாராமெடிக்கல் நிறுவனத்தில் நர்ஸிங் டிப்ளமோ படிப்பில் சேர்த்துவிட்டுள்ளார். இதையடுத்து தன்னுடன் படிக்கும் 5 மாணவிகளுடன் சேர்ந்து ஸ்ரீவில்லிப்புத்தூரில் வீடு எடுத்து தங்கிப் படிக்கப் போவதாக விஜயலட்சுமி அவரது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவர் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள வன்னியம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு எடுத்து சுந்தரேஸ்வரனுடன் தங்கியுள்ளார். இருவரும் திருமணம் ஆகாமலேயே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இது குறித்து இருளப்பனுக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு தான் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் சுந்தரேஸ்வரனின் வீட்டுக்கு சென்று சப்தம் போட்டுள்ளார். பின்னர் ஒருவழியாக இருவீட்டாரும் சமரசமாகி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
விஜயலட்சுமி மைனர் என்பதால் அவர் மேஜரானவுடன் திருமணம் என்று முடிவு செய்யப்பட்டது. திருமணம் முடிவானதால் சுந்தரேஸ்வரனும், விஜயலட்சுமியும் ஒரே வீட்டில் இருந்து படிக்க அவர்களின் பெற்றோர் சம்மதித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் பழையபடி ஒன்றாகவே இருந்தனர். இந்நிலையில் சுந்தரேஸ்வரன் விஜயலட்சுமியிடம் நான் எம்.இ. படிக்கிறேன் ஆனால் நீ வெறும் டிப்ளமோ படிக்கிறாய். நமக்குள் படிப்பு வித்தியாசம் இருப்பதால் ஒத்துப் போகாது என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் புராஜெக்ட் வேலை இருப்பதாக சொல்லிவிட்டு சென்ற சுந்தரேஸ்வரன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி நேராக கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு சென்று சுந்தரேஸ்வரனின் துறை தலைவரை சந்தித்து நடந்ததை தெரிவித்துள்ளார். இதையடுத்து சுந்தரேஸ்வரன் தன்னை யார் பார்க்க வந்தாலும் அனுமதிக்கக் கூடாது என்று பல்கலைக்கழக வாயிலில் உள்ள பாதுகாவலர்களிடம் எழுத்து மூலமாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு மீண்டும் அங்கு சென்ற விஜயலட்சுமி உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
சுந்தரேஸ்வரன் வீட்டுக்கு வருவதாகத் தெரியாததால் விஜயலட்சுமி இது குறித்து ஸ்ரீவில்லிப்புத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் சுந்தரேஸ்வரனை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications