ஏழுமலையானை தரிசிக்க பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் இறந்தால் ரூ.1 லட்சம் நிதி உதவி
திருமலை: திருமலை ஏழுமலையானைப் பார்க்க பாதையாத்திரை வரும் பக்தர்கள் இயற்கையாக மரணமடைய நேரிட்டால் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
அறங்காவலர் குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சேர்மன் பாபிராஜூ கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
திருமலைக்கு பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு, சுவாமி தரிசனத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும். பாத யாத்திரை பக்தர்களுக்கு, "திவ்ய தரிசன' டோக்கன்கள் வழங்குவதில், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தற்காலிகமாக நீக்கப்பட்டு உள்ளன. பாத யாத்திரை பக்தர்கள் அனைவருக்கும், இனி நிபந்தனையின்றி டோக்கன் வழங்கப்படும்.
திருப்பதியில் இருந்து அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு வழியாக, பாத யாத்திரையாக திருமலைக்கு வரும்போது, பக்தரில் யாராவது உடல்நிலை பாதிக்கப்பட்டோ அல்லது இயற்கையாகவோ மரணம் அடைந்தால், அவரின் குடும்பத்தினருக்கு, ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். இத்தொகை, காப்பீட்டு திட்டத்தின் மூலம், பக்தரின் குடும்பத்திற்கு வழங்கப்படும் இவ்வாறு, சேர்மன் பாபிராஜூ தெரிவித்தார்.
திருமலை ஏழுமலையானைக் காண தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பாதையாத்திரையாகவும், வாகனம் மூலமும் வரும் ஏராளமானோர் மணிக்கணக்கில் காத்திருந்து தரிசித்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர். பாதை யாத்திரை பக்தர்களைப் போல மற்ற பக்தர்களின் தரிசன முறையை எளிமைப் படுத்தவேண்டும் என்பது பெரும்பாலோனோரின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications