அண்ணாமலை பல்கலையில் புதிய சர்ச்சை: யுஜிசி அங்கீகாரம் இல்லை... அரசுப் பணி கேள்விக்குறியாகும் அவலம்!

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக பொருளாதாரம் (M.A Applied Economics) (இரண்டாண்டு படிப்பு) கற்பிக்கப்பட்டுவருகிறது. தற்போதைய கல்வியாண்டில் மட்டும் 80 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப் பெற்ற அரசுப் பணிக்காண ஆசிரியர் தேர்வில் பங்கேற்று இப்பிரிவிலிருந்து 8 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றனர். தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு அரசு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
ஆனால் இவர்களது சான்றிதழ் சரிபார்ப்பில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் செயற்படுத்தப்பட்டு வரும் (M.A Applied Economics) பாடப் பிரிவு பல்கலைக்கழக வாரியத்தின் (UGC) அங்கீகாரம் பெறாமல் நடத்தப்பட்டது என்றும் எனவே அவர்களது கல்விச் சான்றிதழ் செல்லத்தக்கது அல்ல என்றும் தெரிவித்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த இருபத்தி இரண்டு ஆண்டுகளாக இப்பிரிவின் மூலம் கல்வி பயின்ற பல்லாயிரக்கணக்காண மாணவர்களது எதிர்காலமும் கேள்விக்குறியாக உள்ளது. ஏற்கெனவே பல்கலை கழகத்தினால் நடத்தப்பட்டுவரும் ஒருங்கிணைந்த ( 5 ஆண்டு) பாடப்பிரிவு அங்கிகாரம் பெறாத நிலையில் தற்போது இரண்டாண்டு படிப்புக்கும் அனுமதியில்லை என்று தெரியவந்ததை அடுத்து மாணவர்களும் ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்களும், நடப்புக் கல்வியாண்டு மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து செவ்வாய்கிழமையன்று பல்கலைக் கழக வளாகத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களுடன் இது குறித்து பல்கலைக்கழகத்தின் சார்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. எனினும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
பல்கலை கழகத்தினால் நடத்தப்பட்டு வரும் பாடப்பிரிவிற்கு அங்கீகாரம் பெறும் வரையிலும், பாதிக்கப் பட்ட மாணவர்களுக்கு நீதி கேட்டு போராட்டம் தொடரும் என்று மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.
சமீப காலமாகவே அண்ணாமலை பல்கலைக்கழகம் சர்ச்சையில் சிக்கி வருகிறது. ஆசிரியர்கள் போராட்டம், ஒருங்கிணைந்த பட்டப் படிப்பு மாணவர் போராட்டம் , மருத்துவக் கல்லூரி மாணவர் போராட்டம், ஊழியர்கள் போராட்டம் என அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிய அண்ணாமலை பல்கலைகழக நிர்வாகம் தற்போது மீண்டும் புதிய சர்சைக்குள்ளாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications