பிப்.1ல் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடக்கம்: ஆளுநர் ரோசய்யா உரை

இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் பிப்ரவரி 1-ம் தேதி காலை சட்டப்பேரவையில் ஆளுநர் ரோசய்யா உரை நிகழ்த்துகிறார். இதற்காக சென்னை கோட்டையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்துக்கு வரும் ஆளுநரை சபாநாயகர் தனபால், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் வரவேற்று சபைக்குள் அழைத்து செல்கின்றனர்.
காலை 10 மணிக்கு ஆளுநர் ரோசய்யா கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். ஆளுநர் உரையில் அரசின் செயல்பாடுகள், புதிய திட்டங்கள் குறித்த அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். அதைத் தொடர்ந்து கவர்னர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் தனபால் வாசிப்பார். அத்துடன் கூட்டம் ஒத்திவைக்கப்படும்.
பின்னர் சபாநாயகர் தலைமையில் சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூடி சபையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து விவாதித்து முடிவு செய்யும். இந்த கூட்டத் தொடர் ஒரு வாரம் நடக்கும் என தெரிகிறது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கும். அதற்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்து பேசுவார். இதைத் தொடர்ந்து சட்டசபை கூட்டம் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும். பிப்ரவரி கடைசி அல்லது மார்ச் முதல் வாரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications