எப்படி இருக்கிறது மருத்துவர் - நோயாளிகள் உறவு?.. கோவையில் ஒரு ஆலோசனைக் கூட்டம்!
கோவை: இன்றைய காலகட்டத்தில் மருத்துவர்கள் - நோயாளிகள், அதாவது பொதுமக்கள் இடையிலான உறவை பலப்படுத்துவது எப்படி என்பது குறித்த ஒரு அருமையான ஆலோசனைக் கூட்டத்தை இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளை ஏற்பாடு செய்துள்ளது.
ஏன் இப்படி ஒரு திடீர் கூட்டம் என்ற கேள்வி எழலாம். நமக்கும் கூட எழுந்தது. அதற்கு அருமையான விளக்கம் சொன்னார் இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை கிளை தலைவர் டாக்டர் ஏ.கே.ரவிக்குமார்.
டாக்டர் ரவிக்குமார் கூறுகையில், முன்பெல்லாம் மருத்துவர்கள் - பொதுமக்கள் உறவு என்பது குடும்ப உறவு போல இருந்தது. இரு தரப்பினரும் மிகுந்த அன்புடனும், பாசத்துனுடம் பழகி வந்தனர். டாக்டர்களை தங்களது குடும்ப உறுப்பினர்கள் போல பார்த்தனர் மக்கள். மேலும் தங்களது குடும்ப நிகழ்ச்சிகளுக்கு டாக்டர்களை அழைப்பதை கெளரவமாக கருதினர். டாக்டர்கள் சொல்வதை வேதம் போல கருதினர் மக்கள். டாக்டர்கள் சொல்வதை தட்டாமல் செய்தனர்.
அதேபோல டாக்டர்களும் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு என்ன பிரச்சினை என்பதை அவர்களுக்கு அதிகம் செலவு வைக்காத வகையில் 'கிளினிக்கில் ட்ரீட்மென்ட்'டிலேயே சரி செய்து வந்தனர். இந்த பந்தம் இன்று இருக்கிறதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
இது நுகர்வோர் காலமாகி விட்டது. டாக்டர்கள் என்ன செய்தாலும் அதை கேள்வி கேட்கும் நிலைக்கு மக்கள் வந்து விட்டனர். குறைகளைக் கண்டுபிடிக்க ஆரம்பித்து விட்டனர். எனவே டாக்டர்களும் முன்பு போல ரிஸ்க் எடுக்க விரும்பவதில்லை. இதனால்தான் நோயாளிகளை பல்வேறு டெஸ்ட்கள் எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்துகிறார்கள். காரணம், இதுவாக இருக்கும் என்று கருதி சிகிச்சை அளித்து அது சரியாக வராதபோது பல்வேறு சிக்கல்களை டாக்டர்கள் சந்திக்க நேரிடுகிறது.
மேலும் பொதுமக்களும் கூட பொது மருத்துவர்களை இப்போதெல்லாம் பெரும்பாலும் நாடுவதில்லை. மாறாக எடுத்த எடுப்பிலேயே ஸ்பெஷலிஸ்ட்டுகளை நாட ஆரம்பித்து விடுகின்றனர். இதனால் அவர்களுக்கு இரட்டிப்பு செலவாகிறது. மேலும் ஸ்பெஷலிஸ்ட்டுகள் அவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை மட்டுமே சரி செய்வார்கள் என்பதை மக்கள் மறந்து விடுகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில்தான் பொதுமக்கள் - மருத்துவர்கள் இடையிலான பந்தம் குறித்த ஒரு குழு ஆலோசனைக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதில் டாகட்ர்கள் சங்கத்திலிருந்து ஒரு குழு கலந்து கொள்கிறது.அதேபோல பொதுமக்கள் தரப்பிலிருந்து வழக்கறிஞர்கள், சமூக சேவகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பங்கேற்கின்றனர். அனைவரும் இணைந்து மருத்துவர் - பொதுமக்கள் பந்தத்தை எப்படி மேம்படுத்துவது, வலுப்படுத்துவது என்பது குறித்து ஆரோக்கியமான விவாதத்தை மேற்கொள்ளவுள்ளோம்.
இரு தரப்புக்கும் இடையே விழுந்து விட்ட இடைவெளியை நிரப்பும் நோக்கத்தில்தான் இந்த ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் டாக்டர் ரவிக்குமார்.
கோவை, ப்ரூக் பாண்ட் சாலையில், சிரியன் சர்ச்சுக்கு எதிரே உள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் கிளை அலுவலகத்தில் ஜனவரி 24ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு - 0422-2471824 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications