பெண் குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க வருகிறது தேசிய செயல் திட்டம்!

ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவது அச்சத்திற்குரியது. இதனால் பெண்களின் மீதான வன்கொடுமைகள் அதிகரிக்கும் இதனை தீர்க்க முக்கிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டிய கட்டாயத்தில் மத்திய, மாநில அரசுகள் உள்ளன.
தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டதை நேற்று முன்னிட்டு டெல்லியில் நடைபெற்ற விழாவில் பெண்கள், குழந்தைகள் நலத்துறை செயலாளர் பிரேம் நரைன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
வடக்கில் பல மாநிலங்களில் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகள் என்ற அடிப்படையில் உள்ளது.
இது மிகவும் முக்கியமான பிரச்னை. மக்கள் தொகையில் நிலவும் இந்த சமநிலையற்ற தன்மையால் கட்டாய திருமணம், கடத்தல், பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க தேசிய செயல் திட்டத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை விரைவில் கொண்டு வரவுள்ளது.
இது குறித்து அரசின் அனைத்து துறை பிரதிநிதிகள், ஐ.நா. அமைப்பு பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள், பெண்கள் சிறப்பு மருத்துவர்கள் உட்பட பலருடன் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் துறை அமைச்சர் கிருஷ்ணா திரத் ஆலோசனை நடத்தியுள்ளார் என்று பிரேம் நரைன் கூறினார்.
கருவில் இருக்கும் குழந்தை பெண் என்று தெரிந்தால் அதை அழிக்கும் கொடூரச் செயல் இன்றைக்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே பெண் குழந்தைகளின் பிறப்பை அதிகரிக்க கருக் கொலைகளை கட்டுப்படுத்தினாலே விகிதாச்சாரம் சரியாகிவிடும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications