விஸ்வரூபம் படத்தைத் தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை - மத்திய அரசு
டெல்லி: விஸ்வரூபம் படத்தைத் தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
டெல்லியில் இதுதொடர்பாக மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சர் மணீஷ்திவாரி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
படங்களை வெளியிட அனுமதி அளிப்பது தொடர்பான விஷயத்தில், தணிக்கைக்குழுவின் கருத்து மற்ற அனைத்தையும் கட்டுப்படுத்தும் என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே இயக்குநர் பிரகாஷ் ஜா வழக்கில் தீர்ப்பு அளித்துள்ளது.
ஒரு படத்தை தடை செய்வது என்பது மாநில அரசின் அதிகார வரம்பில் வரவில்லை. குறிப்பாக தணிக்கைக்குழு அனுமதி அளித்த பிறகு, ஒரு படத்தை தடை செய்வதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.
அரசியல் சாசனச் சட்டத்தின் பிரிவு 246, ஏழாவது அட்டவணை, பட்டியல் ஒன்று, பதிவு 1, சினிமா படங்களை திரையிடுவதற்கு சான்றிதழ் அளிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது. எனவே ஒரு முறை மத்திய தணிக்கைக்குழு, படத்தை திரையிட அனுமதி அளித்த பிறகு, பிற அனைத்தையும் அது கட்டுப்படுத்தும்.
பிரகாஷ் ஜா வழக்கில், திரைப்பட காட்சி சட்டத்தின் அனைத்து வழிவகைகளையும் சுப்ரீம் கோர்ட் ஆராய்ந்தது. இந்த (தணிக்கைக்குழுவின்) அதிகாரத்தை, அரசியல் சாசனச்சட்டம் மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ள சட்டம்-ஒழுங்கு அதிகாரத்துக்கு எதிர் நிலையில் வைத்துள்ளது.
எனவே, தமிழக அரசு இதில் ஒரு முடிவு எடுக்கும் முன்பாக, பிரகாஷ் ஜா வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே அளித்துள்ள தீர்ப்பை மிகக் கவனமாக ஆராய வேண்டும். ஏனெனில், ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக அது மோதுகிற வகையில் அமைந்துவிடக்கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications