திருச்செந்தூருக்கு சென்ற முருக பக்தர் ஓட ஓட வெட்டிக் கொலை, தூத்துக்குடியில் 2 பேர் கொலை
நெல்லை: மாலை அணிந்து திருச்செந்தூருக்கு பாத யாத்திரை சென்ற முருக பக்தர் நெல்லை அருகே ஓட, ஓட வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அம்பாசமுத்திரம் அருகே உள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்(32). தைப்பூசத்தை முன்னிட்டு அவர் முருகப் பெருமானுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் 30 பேருடன் சேர்ந்து திருச்செந்தூருக்கு பாத யாத்திரை கிளம்பினார். நள்ளிரவு 1 மணிக்கு முன்னீர்பள்ளம்-பிராஞ்சேரி கரையடி மாடசாமி கோவிலில் தங்கி ஓய்வு எடுத்தனர். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து செல்ராஜை தாக்கியது.
இதையடுத்து அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்தது. இந்த சம்பவம் குறித்து அவருடன் வந்திருந்த முருக பக்தர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். இது குறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக வாகைக்குளத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் 2 பேர் கொல்லப்பட்டனர். அந்த பிரச்சனை தொடர்பான முன்விரோதத்தால் தான் செல்வராஜும் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இதுதவிர தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கால்வாய் பகுதியைச் சேர்ந்த பட்டமுத்து மற்றும் சண்முகம் ஆகியோர் மோட்டார் திருட்டு தொடர்பான முன்விரோதம் காரணமாக இன்று காலை 10 மணியளவில் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications