சிஏ தேர்வில் சாதனை படைத்த தமிழ்ப் பெண் பிரேமாவுக்கு ரூ. 10 லட்சம் பரிசு - ஜெ.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வெற்றி பெறுவதே கடினம், படித்தால் உடனடி வேலை என்று அனைவராலும் சொல்லக் கூடிய கல்வியாக பட்டயக் கணக்கர் என்கிற சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் கல்வி விளங்குகிறது.
இப்படிப்பட்ட கடினமான பட்டயக் கணக்கர் படிப்பை, விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் பெரிய கொல்லியூர் கிராமத்தைச் சேர்ந்தவரும், மும்பையில் கடந்த 20 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டுநர் தொழில் புரிந்து வரும் ஜெயக்குமார் என்பவரின் மகளுமான பிரேமா என்கிற தமிழ்ப் பெண் தன்னம்பிக்கையுடன் பயின்று, அண்மையில் நடைபெற்ற தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார் என்ற செய்தி அறிந்து நான் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.
இவரது சாதனை தமிழ்ச் சமுதாயத்திற்கு மிகுந்த பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து, பல்வேறு இன்னல்களுக்கு இடையில் கல்வி பயின்று, நிதித் துறையில் மிக உயரிய கல்வியாக கருதப்படும் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் தேர்வில் அகில இந்திய அளவில் முதல் இடத்தை பெற்று சாதனைப் படைத்த செல்வி பிரேமாவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்ச் சமுதாயத்திற்கு பெருமை தேடித் தந்த பிரேமாவை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் அவருக்கு ரூ.10 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் துறையில் மேலும் பல சாதனைகளை படைத்து, பல உயர் பதவிகளை அடைந்து, எல்லா நலமும் வளமும் பெற்று, வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் அவரது வருங்கால வாழ்க்கை அமைய வேண்டும் என்று பிரேமாவை மனதார வாழ்த்துகிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications