பாலியல் குற்றங்கள் - வர்மா குழு பரிந்துரைகளுக்கு கருணாநிதி வரவேற்பு
சென்னை: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கான தண்டனை குறித்து முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ்.வர்மா குழு அளித்துள்ள பரிந்துரைகள் அனைத்தும் வரவேற்கப் பட வேண்டியவை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
அரசால் நியமிக்கப்படும் எந்தக் குழுவும் பொதுவாக குறிப்பிட்ட கால வரையறைக்குள் அறிக்கைகளையோ பரிந்துரைகளையோ அளிப்பதில்லை. மேலும் மேலும் கால அவகாசம் கேட்டு தள்ளிப் போடுவதே வழக்கம். ஆனால் அந்த வழக்கத்திற்கு மாறாக குறிப்பிட்ட காலவரையறைக்குள்ளாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து அவசர அவசியத்தைக் கருதி, விரிவாக பரிசீலனை செய்து, மிகப் பெரிய அறிக்கை ஒன்றினை நீதிபதி ஜே.எஸ். வர்மா குழு மத்திய அரசிடம் அளித்திருப்பதே பாராட்டத் தக்கதாகும்.
பல்வேறு தரப்பினரும் டெல்லியில் பாலியல் குற்றம் புரிந்த குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை அளிக்க வேண்டுமென்று கூறிய நேரத்தில், நான் மட்டும் தான் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் கருத்தினைத் தொடர்ந்து, யாருக்கும் தூக்குத் தண்டனை வழங்கக் கூடாதென்றும், பாலியல் போன்ற கொடிய குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை - தனிமைச் சிறை தான் அளிக்கப்பட வேண்டுமென்றும் கூறியிருந்தேன்.
6-1-2013 அன்று நடைபெற்ற திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களில் ஒன்றாக பாலியல் கொடுமைகளில ஈடுபடும் கொடியவர்களுக்குக் கடுமையான தண்டனை என்பது அவர்களை ஆயுள் முழுவதும் தனிமைச் சிறையில் அடைத்து வைக்க வேண்டும் என்பது தான் என்று நிறைவேற்றப்பட்டது.
நீதிபதி ஜே.எஸ். வர்மா குழுவும் பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனையைப் பற்றிப் பரிசீலிக்காததும்; பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோருக்கு அதிகப் பட்சம் இருபதாண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கலாம் என்றும், கூட்டாக இக்குற்றத்தைப் புரிவோருக்கு, அவர்களை வாழ்நாள் முழுவதும் சிறையிலே வைத்திருக்கவும் பரிந்துரைத்திருப்பதும் வரவேற்கத்தக்கதாகும்.
ஆனால் ஒரு சிலர் மிகவும் அவசரப்பட்டு பாலியல் குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டுமென்றும், பாலியல் குற்றம் புரியும் ஆண்களுக்கு ரசாயன முறைகளைப் பயன்படுத்தி ஆண்மைத் தன்மையை நீக்க வேண்டுமென்றும் சொன்ன கருத்துக்களையெல்லாம் வர்மா குழு புறந்தள்ளியிருப்பதும் பாராட்டத்தக்கதாகும்.
நீதிபதி ஜே.எஸ். வர்மா குழுவின் பரிந்துரைகளை உரிய கால வரையறைக்குள் பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான செயல் முறைகளை மத்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications