குடியரசு தினம்: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

நாடு முழுவதும் குடியரசுதின விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த ஆண்டு பாளையங்கோட்டை, அண்ணா விளையாட்டு மைதானத்தில் குடியரசு தின விழா நடக்கிறது.
கலெக்டர் சமயமூர்த்தி தேசியக்கொடி ஏற்றி போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். விழாவில் உயர் அதிகாரிகள், முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர். நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. சீரிய முறையில் பணியாற்றியவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. குடியரசுதின விழாவை முன்னிட்டு நெல்லையில் கமிஷனர் சுனில்குமார் சிங், துணை கமிஷனர் ராஜராஜன் உத்தரவுப்படி உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் மேற்பார்வையில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், அரசு அலுவலகங்கள், வழிபாட்டுத்தலங்கள் முன்பு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்படவுள்ளது.
நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். ரயில் நிலையத்தில் பயணிகளின் பொருட்கள் மெட்டல் டிடெக்டர், மோப்பநாய் மூலம் சோதனை செய்யப்படுகிறது. லாட்ஜ்களில் சந்தேகத்திற்குரிய வகையில் யாராவது தங்கியுள்ளார்களா என சோதனை நடக்கிறது. பாளையங்கோட்டை, அண்ணா விளையாட்டு மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர். மாணவ, மாணவிகள் கலைநிகழ்ச்சி ஒத்திகை நடத்துகின்றனர். இன்று மாலை முதல் மைதானம் போலீஸ் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படவுள்ளது.
டி.ஐ.ஜி. சுமித்சரன், எஸ்.பி. விஜயேந்திர பிதாரி உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செக்போஸ்ட்களில் வாகன சோதனை மும்முரமாக நடக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையம், விஜயநாராயணம் கடற்படைத்தளம், மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய தொழில் பாதுகாப்புப்படை பலப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications