விவசாயிகளை பாதுகாக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மதிமுக ஆர்பாட்டம்… வைகோ அறிவிப்பு
சென்னை: வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளைப் பாதுகாக்க வலியுறுத்தி, ஜனவரி 30 ஆம் தேதி தமிழ்நாட்டில் மாவட்டத் தலைநகரங்களில் மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நெல்லை மாவட்டம்- சங்கரன்கோவில் வட்டத்தில், வரகனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன்நாதன் என்ற 48 வயது விவசாயி, நேற்று மனம் உடைந்து வீட்டுக்குள்ளேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி மனதில் தாங்க முடியாத அதிர்ச்சியைத் தந்துள்ளது.
ஏக்கருக்கு 25 ஆயிரம் செலவு செய்த நிலையில் மழை பொய்த்ததால், பாசனத்திற்கு தண்ணீர் இல்லாததால், பயிர்கள் கருகிப் பாழாய் போயின. கடனை அடைக்க வழியின்றி வேதனையில் துடித்து உயிரை முடித்துக்கொண்டார்.
12 விவசாயிகள் தற்கொலை
ஏற்கனவே தமிழ்நாட்டில் 12 விவசாயிகள் இதுபோலத் தற்கொலை செய்து, வாழ்வை முடித்துக்கொண்டனர். வறட்சியின் காரணமாக தங்கள் உயிரை மாய்த்துக்கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு, மாநில அரசு பத்து இலட்ச ரூபாய் நிவாரணம் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தேன்.
தற்போது தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், பெரும்பாலான பகுதிகளில்,வறட்சியின் கோர தாண்டவத்தால், விவசாயிகள் தாங்கமுடியாத நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.
கிராமப்புறங்களில் கடன்களை அடைக்க வழியின்றியும், தங்கள் குடும்பங்களை பராமரிக்கக்கூட பொருளாதாரம் இன்றியும், விரக்திமேலிட்டவர்களாக மனம் உடைந்து நொறுங்கிக் கிடக்கிறார்கள் விவசாயிகள். ஆடு மாடுகள் குடிக்கத் தண்ணீர் கிடையாது. மாடுகளைப் பராமரிக்க முடியாமல்,அடிமாட்டு விலைக்கு விற்கும் விபரீதம் ஏற்பட்டுவிட்டது. இப்படி ஒரு துக்ககரமான நிலைமை தமிழ்நாட்டில் கடந்த பல ஆண்டுகளில் ஏற்பட்டது இல்லை. உடனடியாக, விவசாயிகளையும், அவரது குடும்பங்களையும் பாதுகாக்க வேண்டிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளாவிட்டால், நிலைமை மிகவும் மோசமாகிவிடும்.
எனவே, தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும், பயிர் செய்து, தக்க விளைச்சல் இல்லாமல், செய்த முதலீட்டையும் இழந்து, கடனில் தவிக்கும் விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு, 25 ஆயிரம் ரூபாய் மாநில அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.
உரிய நிவாரணம் வழங்குக
தமிழகம் வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட வேண்டும்.வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் மாநில அரசு வழங்க வேண்டும். விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள், பயிர்க் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். தேசிய வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களை மத்திய அரசு இரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் அசாதாரணமான இந்த நிலையை கருத்தில் கொண்டு, மத்திய அரசு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம்
விவசாயிகளைப் பாதுகாக்க தக்க நடவடிக்கைகளை மாநில அரசும், மத்திய அரசும் மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாட்டில் மாவட்டத் தலைநகரங்களில் ஜனவரி 30 ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணி அளவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தலைநகர் சென்னையில் பிப்ரவரி 6 ஆம் தேதி புதன்கிழமை அன்று காலை 11 மணி அளவில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இவ்வாறு வைகோ அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
ஜனவரி 30 ஆம் தேதி திருநெல்வேலியில் நடைபெறும் ஆர்பாட்டத்திலும், பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று தலைநகர் சென்னையிலும் நடைபெறும் ஆர்பாட்டத்திலும் வைகோ பங்கேற்கிறார் என்று அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications