பாக். சிறையில் குழாய் நீரில் துணி துவைத்ததற்காக இந்தியர் அடித்துக் கொலை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறையில் இருந்த இந்தியர் சமேல் சிங் சிறை அதிகாரிகள் அடித்து நொறுக்கிய இரண்டாவது நாள் மரணம் அடைந்துள்ளார்.
பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக இந்தியரான சமேல் சிங்கிற்கு அந்நாட்டு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து லாகூரில் உள்ள கோட் லாக்பட் சிறையில் அடைக்கப்பட்ட அவரின் தண்டனை காலம் விரைவில் முடியவிருந்தது. இந்நிலையில் சமேல் சிங் மரணம் அடைந்தார்.
கோட் லாக்பட் சிறையில் இருந்து அண்மையில் விடுதலையான பாகிஸ்தானைச் சேர்ந்த வழக்கறிஞர் தஹ்சீன் கான் கூறியதாக ஊடகங்கள் கூறியிருப்பதாவது, சமேல் சிங் கடந்த 15ம் தேதி ஒரு குழாயில் தண்ணீர் பிடித்து துணி துவைத்தற்காக சிறை அதிகாரிகள் அவரை அடித்து நொறுக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் ஜின்னா மருத்துவமனையில் 2 நாட்கள் கழித்து இறந்தார். சிறை அதிகாரிகள் இந்தியர்களைப் பற்றியும், சிறுபான்மையினரைப் பற்றியும் அவதூறாகப் பேசினர். அந்த சிறையில் உள்ள சரப்ஜித் சிங் உள்ளிட்ட இந்தியர்களுக்கு அச்சுறுத்தல் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சமேல் சிங் கடந்த 15ம் தேதியே இறந்ததாக பாகிஸ்தான் அதிகாரிகள் தங்களிடம் கூறியதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமேல் சிங்கின் மரணம் குறித்து அவரது குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதா அல்லது பாகிஸ்தானிலேயே இறுதிச் சடங்குகளை செய்து விடுவதா என்பது குறித்து அவரது குடும்பத்தாரின் வார்த்தைக்காக இந்திய அதிகாரிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். சமேல் சிங்கை பாகிஸ்தான் சிறை அதிகாரிகள் அடித்தது குறித்து தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications