விஸ்வரூபம் பிரச்சனை: கர்நாடகாவில் கடைகளுக்கு தீ வைப்பு, 144 தடை உத்தரவு
பெங்களூர்: கர்நாடகத்தில் விஸ்வரூபம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்ராவதி பகுதியில் உள்ள சில கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டம் பத்ராவதியில் இருக்கும் தியேட்டரில் கமல் ஹாசனின் விஸ்வரூபம் நேற்று திரையிடப்பட்டது. காலை காட்சி ஓடிக் கொண்டிருக்கையில் சிலர் தியேட்டருக்குள் புகுந்து படத்தை திரையிடக் கூடாது என்று கூறினர். இதையடுத்து படம் பார்த்தவர்களுக்கும், படத்தை திரையிட எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கும் இடேயே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதையடுத்து அங்கு வந்த போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைந்து போகச் செய்தனர்.
இந்நிலையில் ஒரு கும்பல் இந்திரா நகரில் உள்ள செருப்பு கடை உள்பட சில கடைகளுக்கு தீ வைத்தது. மேலும் தியேட்டர் மீதும் கல்வீசினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பலமுறை தடியடி நடத்தியும் கூட்டம் கலைந்தபாடில்லை. இதற்கிடையே சிலர் சாலையில் டயர்களை கொளுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் பத்ராவதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டது. மேலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. மைசூர் பாலாஜி தியேட்டரிலும் விஸ்வரூபத்தை திரையிட எதிர்ப்பு கிளம்பியதால் படம் ரத்து செய்யப்பட்டது.
பெங்களூர் லால்பாக் சாலையில் இருக்கும் தியேட்டரில் நேற்று காலை காட்சியில் விஸ்வரூபம் ஓடிக் கொண்டிருக்கையில் பகல் காட்சிக்கு டிக்கெட் வழங்கப்பட்டது. ஆனால் மதியம் 1 மணிக்கு படத்தை திரையிட போலீசார் தடை விதித்ததோடு தியேட்டருக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று தெரிவித்துவிட்டனர்.
இதையடுத்து தியேட்டர் உரிமையாளர், பகல் காட்சிக்கு டிக்கெட் வாங்கியவர்கள் அதை திரும்ப கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக் கொள்ளவும் என்று அறிவித்தார். ஆனால் படத்தை பார்த்துவிட்டு தான் போவோம் என்று கூறி பலர் தியேட்டர் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து நாளை(இன்று) படம் கட்டாயம் திரையிடப்படும் என்று கூறி போலீசார் தர்ணாவில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications