நெல்லையில் அஜீரணத்தால் பெண் யானை மரணம்
நெல்லை: நெல்லை வனப்பகுதியில் பெண் யானை ஒன்று அஜீரணத்தால் மரணம் அடைந்தது.
நெல்லை மாவட்டத்தில் களக்காடு முதல் முண்டந்துறை வரையிலும் புலிகள் காப்பகம் செயல்படுகிறது. இந்த வனப்பகுதியில் யானைகளும் உள்ளன. மணிமுத்தாறு அணையில் இருந்து மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் செல்லும் வழியில் கோயில்தட்டை பகுதியில் கடந்த சில தினங்களாக ஒரு யானை உலவி வந்ததை வன ஊழியர்களும், எஸ்டேட் தொழிலாளர்களும் பார்த்துள்ளனர். நேற்று அந்த யானை இறந்து கிடந்தது.
இது குறித்து தகவல் அறிந்த புலிகள் காப்பக துணை இயக்குநர் குருசாமி, உதவி வன பாதுகாவலர் உள்ளிட்டோர் அங்கு சென்று பார்த்தனர். சுமார் 45 வயதுடைய பெண் யானை உணவு ஜீரணமாகாமல் இறந்துள்ளது தெரிய வந்தது. நோயுற்ற யானையை புதைத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்பதால் அங்கேயே தீ வைத்து எரியூட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வசிக்கும் யானைகளுக்கு போதிய உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டு அவைகள் ஊருக்குள் புகுந்து வயல்வெளிகளில் கண்ணில்பட்டதை உண்டு செல்வதால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே கடையநல்லூர் வனப்பகுதியில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இதே போன்று ஒரு பெண் யானை இறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications