என்னைத் தூக்கி வையுங்கள், ஆனால் குப்பைக் கூடையி்ல போட்டு விடாதீர்கள்.. கருணாநிதி
சென்னையில் நடந்த திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு கருணாநிதி பேசுகையில்,
நான் நம்முடைய கழகத்தோழர்களுக்கு இந்தத் திருமணத்தின் மூலமாகச் சொல்லிக் கொள்கிறேன். மணமக்களுக்கு அறிவுரை சொல்வது, வாழ்த்துரை சொல்வது எல்லாம் பிறகு இருக்கட்டும். முதலில் நம்முடைய கழகத்தோழர்களுக்கு கட்டுப்பாட்டை எப்படிக் காப்பது என்று சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இருக்கிறது.
நாங்களாக ஒரு தேதியை வைப்போம், அந்தத் தேதியில் நீ வந்து பேச வேண்டும், மணமக்களை வாழ்த்த வேண்டுமென்றால், நல்லவேளையாக நானும் ஊரிலே இருந்து இந்த மணவிழாவிற்கு வரக்கூடிய வாய்ப்பாக அமைந்த காரணத்தால், இங்கே வந்து பேசக்கூடிய, வாழ்த்தக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. இல்லாவிட்டால் என்ன நடந்திருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.
கழகத் தலைவர் சாதாரண தோழருடைய வீட்டுத் திருமணத்திற்குக் கூடப் போவார், அங்கே கூடப் போய் மண விழாவினை நடத்தி வைப்பார் என்பது என்னை தூக்கி வைத்து காரியம் சாதித்துக் கொள்கிற ஒன்று. என்னை தூக்கி வையுங்கள், நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் தூக்கி வைத்து, எங்கேயாவது குப்பைக்கூடையில் போட்டு விடாதீர்கள் என்பது தான் நான் வைக்கின்ற வேண்டுகோளாகும்.
கழகத்திலே அண்ணா சொன்னதைப் போல், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு-என்ற இந்த மூன்றையும் போற்றாதவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், அவர்கள் எவ்வளவு நெருக்கமானவர்களாக இருந்தாலும்-கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற இந்த மூன்றையும் ஒழுங்காக, முறையாக கடைப்பிடிக்க வேண்டும். அப்படி கடைப்பிடிப்பவரைத் தான் நான் கழகத்தின் தொண்டன் என்று ஏற்றுக்கொள்வேன்.
அந்த வகையில்-அந்தக் கட்டுப்பாட்டை ஓரளவிற்கு மீறி, போட்டு வைப்போம் பெயரை, வராமலா போய் விடுவார் என்று என் பெயரை அவர்களாகவே அழைப்பிதழில் வெளியிட்டு, அழைப்பிதழ் கொடுத்து, இங்கே நீங்கள் ஆயிரக்கணக்கில் திரண்டிருக்கிறீர்கள் என்றால் நான் மணமகனை, மணமகளை ஏமாற்றுவதற்குக் கூடத் தயார், ஆனால் இங்கே குழுமியிருக்கின்ற ஆயிரக்கணக்கான தமிழர்களை ஏமாற்ற நான் தயாராக இல்லை. ஆனால் எதுவும் முறைப்படி நடந்தால் தான் அது நல்லது.
தி.மு.க.விலே நாம் இன்றைக்கு மிக மதிப்பாக போற்றிப் புகழ்ந்து பாராட்டி இவ்வளவு பெரிய தோல்வியை இன்றைக்கு நாட்டிலே நாம் ஏற்றுக் கொண்டாலும்கூட, அந்தத் தோல்விக்குப் பிறகும் கழகம், இவ்வளவு சிறப்பாக இருப்பதற்குக் காரணமே, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற இவற்றை நாம் காப்பாற்றியதால் தான் என்பதை நீங்கள் மறந்து விடாமல், இந்த மணவிழா வீட்டாரும், இந்த மணவிழாவிற்கு வந்திருக்கின்ற கழகக் கண்மணிகளாகிய நீங்களும், அந்தக் கடமையையும், கண்ணியத்தையும், கட்டுப்பாட்டையும் காப்பாற்ற வேண்டுமென்று நான் வாழ்த்துகின்றேன்.
நான் பாராட்டினாலும் கூட, உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருப்பேன்-யாராக இருந்தாலும், அவர் என் கண்களுக்குத் தப்ப முடியாது. தவறு செய்கிறவர்கள், திராவிட இயக்கத்தைக் கட்டிக்காக்க வேண்டுமென்று போலியாகச் சொல்லிக்கொண்டு, மறைமுகமாக தவறு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நான் மன்னிப்பதில்லை. ஏனென்றால் எனக்கு அவர்களை விட, இன்னும் சொல்லப் போனால், என்னை விட கழகம் பெரிது, கொள்கை பெரிது என்று எண்ணுகிறவன்.
ஆகவே அந்தக் கொள்கையைக் காப்பாற்றவும், இந்த இயக்கத்தைக் காப்பாற்றவும் அண்ணா-அண்ணாவை உருவாக்கிய பெரியார் கொள்கைகளைக் காப்பாற்றவும் என்றென்றும் நாம் ஒன்று பட்டு உழைப்போம் என்றார் அவர்.
கருணாநிதி யாரை எச்சரித்தார் என்பது உங்களுக்காவது புரிந்ததா...??