தான் ஆரம்பித்த கட்சியிலிருந்தே நீக்கப்பட்ட எதியூரப்பா!
கர்நாடகத்தில் ஆட்சிக்கு வந்த எதியூரப்பா ஆபரேசன் கமலா நடத்தி பிற கட்சியிலிருந்து எம்எல்ஏக்களை விலக வைத்தும், விலைக்கு வாங்கியும் ஆட்சியை ஸ்திரப்படுத்தினார்.
இதையடுத்து அடுத்தடுத்து பெரும் ஊழல்களில் ஈடுபட்ட அவரது கட்சியினரால் வழக்குகள் பாய்ந்தன. இதைத் தொடர்ந்து எதியூரப்பா பதவி விலகினார். தனக்கு பதிலாக தானே முதல்வர் பதவியில் அமர வைத்த சதானந்த கெளடாவை அடுத்த சில மாதங்களிலேயே வருடத்தில் நீக்கிய எதியூரப்பா, அவருக்குப் பதில் ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்கினார்.
ஆனால், அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு கர்நாடகத்தில் பாஜக ஆட்சியைக் கவிழ்க்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். தொடர்ந்து தனது ஆதரவு அமைச்சர்கள், எம்எல்ஏக்களை பதவி விலக வைத்து வருகிறார்.
மெஜாரிட்டி குறைந்துவிட்ட நிலையிலும், எவ்வளவு அசிங்கங்கள் நடந்தாலும் ஒன்றுமே தெரியாதது மாதிரி ஆட்சியில் தொங்கிக் கொண்டுள்ளது பாஜக.
இந் நிலையில் இன்று எதியூரப்பா ஆதரவு 13 பாஜக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் போப்பையாவிடம் தங்கள் ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர்.
இன்று காலை சபாநாயகர் போப்பையாவை சந்தித்து தங்கள் ராஜினாமா கடிதங்களை அளித்தனர். முன்னதாக போப்பையா ஒவ்வொரு எம்.எல்.ஏ.வையும் தனித்தனியாக சந்தித்து உங்களை ராஜினாமா செய்ய யாராவது வற்புறுத்தினார்களா? உங்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதா என்று விசாரித்தார். அதன் பிறகே ராஜினாமா கடிதங்களை பெற்றுக் கொண்டார்.
இருப்பினும் 13 பேரில் ஒருவரின் ராஜினாமா மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
எதியூரப்பாவே நீக்கம்..
இந் நிலையில் எதியூரப்பா தொடங்கிய கர்நாடக ஜனதா கட்சியிலிருந்து எதியூரப்பாவையே நீக்கி, அதன் தலைவராக பிரசன்னா குமார் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
இதற்கிடையே எதியூரப்பாவை கட்சியை விட்டு நீக்கியுள்ளதாகவும் பிரசன்ன குமாரை தலைவராக நியமித்துள்ளதாகவும் அந்தக் கட்சி இன்று தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.