இங்கே குளிர் ஜாஸ்தி, வராதீங்க: ரோமானியர்கள், பல்கேரியர்களை வரவிடாமல் தடுக்க யு.கே. பிளான்
லண்டன்: இங்கிலாந்தில் வேலை பார்க்க படையெடுக்கும் பல்கேரியா மற்றும் ரோமானியாவைச் சேர்ந்தவர்களின் வருகையை தடுத்து நிறுத்த அங்கு கடுங்குளிராக இருப்பதாக விளம்பரப் பிரச்சாரம் செய்ய இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
ரோமானியா மற்றும் பல்கேரியாவில் இருந்து மக்கள் இங்கிலாந்துக்கு வேலைக்கு வருவதை தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து இங்கிலாந்து அமைச்சர்கள் திட்டமிட்டு வருகின்றனர். இங்கு கடுங்குளிராக இருக்கிறது, நீங்கள் இங்கு வந்தால் பணம் சம்பாதிக்க முடியாது என்று விளம்பரப் பிரச்சாரம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 70,000 பேர் இங்கிலாந்தில் குடியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக மக்கள் வருவதை தடுக்கத் தேவையான முயற்சியில் இங்கிலாந்து அரசு இறங்கியுள்ளது. இந்த விளம்பரங்களை எல்லாம் பொருட்படுத்தாது இங்கிலாந்தில் வந்து குடியேறுபவர்கள் வேலை இல்லாமல் இருந்தால் 3 மாதத்திற்கு பிறகு அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவர். மேலும் ரோமானியா மற்றும் பல்கேரியாவில் இருந்து வருபவர்கள் 6 மாதத்திற்கு பிரச்சனையின்றி வாழும் அளவுக்கு வழி இருக்கிறது என்பதை நிரூபித்தால் மட்டுமே இங்கிலாந்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
என்ன தான் இங்கிலாந்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும் அங்கு வேலை வாங்கித் தரும் ஏஜென்சிக்கள் ரோமானியா மற்றும் பல்கேரியாவில் அதிகரித்து வருகிறது.
ரோமானியா தலைநகர் புகரெஸ்ட்டில் உள்ள வேலை வாங்கித் தரும் நிறுவனம் ஒன்று கூறுகையில், இங்கிலாந்தில் வேலை கேட்டு நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். காத்திருப்போர் பட்டியல் மிகவும் நீளமாக இருப்பதால் புதிய விண்ணப்பங்கள் பெறுவதை நிறுத்தியுள்ளோம்.
ரோமானியா மற்றும் பல்கேரியாவில் சம்பளம் மிகக் குறைவாக இருப்பதால் அங்குள்ளவர்கள் இங்கிலாந்தில் பணிபுரிய படையெடுக்கின்றனர். இதை தடுக்கத் தான் இங்கிலாந்து அரசு விளம்பரப் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications