திமுக கட்டிகாக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் உருவாகியுள்ளார்: பேராசிரியர் அன்பழகன்
திட்டக்குடி: திமுக கட்டிகாக்கும் ஒரு தலைவராக மு.க.ஸ்டாலின் உருவாகியுள்ளார் என்று அக் கட்சியின் பொதுசெயலாளர் பேராசிரியர் அன்பழகன் கூறினார்.
திட்டக்குடியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் பேசிய அவர், திராவிட இயக்கம் தேர்தலில் தோற்றிருந்தாலும் மக்கள் மனதில் கலந்திருக்கிறது என்பதுதான் உண்மை. இந்த இயக்கம் தாழ்த்தப்பட்டவர்கள், உழைப்பவர்கள், தாய்மார்கள், குழந்தைகள் என அனைவருக்காகவும் பாடுபடும் இயக்கம்.
ஸ்டாலின் திமுகவை கட்டி காக்கும் ஒரு தலைவராக உருவாகியுள்ளார்.
தமிழ்மொழியை நாம் போற்ற நமக்கு ஒத்துழைக்கும் ஒரே இயக்கம் திமுக தான். பெண்கள் படித்தவர்களாக மாறியிருப்பதற்கு காரணம் கருணாநிதிதான். மிகவும் பிற்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதால் தான் முன்னேறியிருக்கிறோம்.
இன்று காவிரி டெல்டா மாவட்டங்களில் பாடுபடும் உழவர்கள் பட்டினி கிடக்கிறார்கள். அதில் 9 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் காவல்துறையை முறையாக செயல்பட அனுமதிப்பது இல்லை. மக்கள் நிம்மதியில்லாமல் உள்ளனர். வேலையில்லா திண்டாட்டம் அதிகமாகி பிரச்சனைகள அதிகரித்துள்ளன. மதசார்பற்ற ஆட்சி டெல்லியில் இருக்க இன்றைய ஆட்சி நீடிக்க வேண்டும்.
தற்போதைய மத்திய அரசிடம் சில குறைகள் இருந்தாலும் திமுக மத்திய அரசை ஆதரிக்கிறது. இன்று தமிழினம் வீழ்ச்சியாகி கொண்டிருக்கிறது. இந்த கொடுமையிலிருந்து நாட்டைக் காப்பாற்ற வரும் நாடாளுமன்ற தேர்தலில் கருணாநிதியின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் என்றார் அன்பழகன்.












Click it and Unblock the Notifications