மருத்துவமனையாக மாறியது புதிய தலைமைச் செயலகம்... டாக்டர்கள் ஊசி போட்டனர்!

சென்னை அரசினர் தோட்டத்தில் புதிய தலைமை செயலக கட்டிடம் கடந்த திமுக ஆட்சியின்போது ரூ.450 கோடி செலவில் கட்டப்பட்டது. முதல்வராக இருந்த கருணாநிதி தினசரி நேரில் சென்று கட்டுமானப் பணியைப் பார்வையிட்டார், பார்த்துப் பார்த்து அதை உருவாக்கினார். மேலும் சட்டசபை வளாகமும் இதிலேயே அமைந்தது.
ஆனால் இந்தக் கட்டடத்தை ஏற்க முடியாது என்று அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்தது, ஜெயலலிதா முதல்வரானார்.
ஆட்சியில் அமர்ந்ததும் முதல் வேலையாக, புதிய தலைமைச் செயலகத்தை பன்னோக்கு மருத்துவமனையாகவும், மருத்துவக் கல்லூரியாகவும் மாற்றப் போவதாக அவர் அறிவித்தார். இதை எதிர்த்து சென்னை உயர்நீதி்மன்றத்தில் வழக்குகள் போடப்பட்டன. ஆனால் அதை விசாரித்த உயர்நீதி்மன்றம், அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து அரசு துரித கதியில் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இன்று தமிழ்நாடு அரசு பன்நோக்கு நவீன சிறப்பு மருத்துவமனையாக இது பெயர் மாற்றப்பட்டு செயல்பாட்டையும் தொடங்கியது. அண்ணா சாலையில் உள்ள நுழைவு வாசலில் மருத்துவமனைக்கான போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. கட்டிடத்தின் உள்ளே மூன்று அறைகளில் புற நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட்டு அங்கு பொதுமக்களுக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்துகளும் வழங்கப்பட்டன.
15 டாக்டர்கள், 10 செவிலியர்கள் பணியில் அமர்ந்து நோயாளிகளை பரிசோதித்து தேவையான சிகிச்சை பரிந்துரைகள் கூறினர். இருதயம், நரம்பியல் சம்பந்தப்பட்ட டாக்டர்களும் வந்திருந்து ஆலோசனை வழங்கினார்கள். அங்குள்ள வளாகத்தில் ஆம்புலன்ஸ் வண்டிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
மருத்துவக் கல்வி இயக்குனர் புஷ்பதாராவும் இன்று வந்திருந்து மருத்துவமனை செயல்படுவதை பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications