ஆண்டிப்பட்டியில் அழகிரி பிறந்தநாளில் திமுக கோஷ்டி மோதல்: ஒ.செ. மண்டை உடைப்பு
தேனி: ஆண்டிப்பட்டியில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது திமுகவினர் மோதிக் கொண்டதில் ஒன்றிய செயலாளர் வைகை சேகரின் மண்டை உடைந்தது.
21-11-2012 அன்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் திமுக உட்கட்சி தேர்தல் கூட்டம் நடந்தது. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட இரு கோஷ்டி இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் உருட்டுக்கட்டையால் அடித்துக் கொள்ளும் அளவுக்கு சென்றது. இந்த மோதலில் காயம் அடைந்த முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் செஞ்சூரி(65) உயிர் இழந்தார்.
இதையடுத்து 2 கோஷ்டிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மீது ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இது தொடர்பாக ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் வைகை சேகர் உள்பட 5 பேரை கைது செய்தனர். அதில் வைகை சேகர் தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவரும், அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள மதுரை சென்றனர். விழா முடிந்து நேற்று மதியம் அவர்கள் ஆண்டிப்பட்டி திரும்பி அங்குள்ள மக்களுக்கு சேகர் தலைமையில் இனிப்பு வழங்கினர்.
அதன் பிறகு அவர்கள் பேருந்து நிலையம் அருகே உள்ள டீக்கடை ஒன்றில் நின்று கொண்டிருக்கையில் மர்ம கும்பல் ஒன்று அங்கு வந்தது. அந்த கும்பல் சேகர் மற்றும் அவரது ஆதரவாளர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டது. இதில் சேகரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
அவருடன் நின்று கொண்டிருந்த கருணாகரன், கோகுல், ஜெயராஜ், விக்னேஷ் ஆகியோரும் காயமடைந்தனர். அவர்கள் காயத்துடன் ஆண்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவம் குறித்து புகார் அளித்தனர்.
புகார் மனுவில், அணைக் கரைப்பட்டியை சேர்ந்த சிவன், செஞ்சூரி மகன் செல்வம், சசிக்குமார் உட்பட 10க்கும் மேற்பட்டவர்கள் எங்களை தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து போலீசார் காயமடைந்தவர்களை தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் பிறந்தநாள் அன்று திமுகவினர் மோதிக் கொண்ட சம்பவத்தால் ஆண்டிப்பட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications